பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த 10 போட்டிகளில் தன் சொந்த மண்ணில் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறி இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அதற்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறார் விராட் கோலி. பெங்களூரு அணி பேட்டிங் செய்த போது விராட் கோலியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. ஆனால், விராட் கோலி முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை களத்தில் நின்றார். 59 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார்.

விராட் கோலி கடைசி வரை களத்தில் நின்றாலும், முதலில் இருந்து கடைசி வரை அவரது ஸ்ட்ரைக் ரேட் உயரவே இல்லை. 140 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலேயே கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்தார் கோலி. முதல் 15 ஓவர்களில் விக்கெட் வீழ்ச்சியை தடுக்க கோலி சற்று நிதானித்து ஆடினாலும், பெங்களூரு சின்னசாமி மைதானம் போன்ற சிறிய பவுண்டரி எல்லை கொண்ட மைதானத்தில் கூட அவர் கடைசி 5 ஓவர்களில் அதிக பவுண்டரி அடிக்க முயற்சிக்கவில்லை.
விராட் கோலி தனது இன்னிங்ஸில் 4 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். அதாவது அவர் எடுத்த 83 ரன்களில் 40 ரன்கள் மட்டுமே பவுண்டரியில் வந்தன. மீதமுள்ள 43 ரன்கள் சிங்கிள் ரன்களாக ஓடியே கிடைத்தன. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. தினேஷ் கார்த்திக் கடைசி 2 ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி 8 பந்துகளில் 20 ரன்கள் குவித்ததால் மட்டுமே பெங்களூரு அணி இந்த ரன்களையும் கூட சேர்க்க முடிந்தது.
அடுத்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்பார்த்தது போலவே அதிரடி ஆட்டம் ஆடி 10 ஓவர்களில் எல்லாம் 112 ரன்கள் குவித்தது. பின்னர் 16.5 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அந்த அணியின் சுனில் நரைன் 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். பில் சால்ட் 20 பந்துகளில் 30 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 50 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 39 ரன்களும் குவித்தனர்.
விராட் கோலி கடைசி வரை களத்தில் நின்றாலும் கடைசி 5 ஓவர்களில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் தோல்விக்கு காரணமே அவர் தான் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.