பெங்களூர் : கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் பந்தில் ஸ்வீப்பர் கவர் திசையில் அடித்துவிட்டு, மிக விரைவாக 2வது ரன்னை விராட் கோலி எடுத்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 59 பந்துகளில் 4 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 83 ரன்களை விளாசி அசத்தினார்.

முதல் பந்து முதல் கடைசி வரை களத்தில் இருந்து விராட் கோலி ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்க்கும் வீரர்களுக்கு அளிக்கப்படும் ஆரஞ்சு கேப்பையும் விராட் கோலி கைப்பற்றியுள்ளார். 3 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி 2 அரைசதங்கள் உட்பட 181 ரன்களை விளாசியுள்ளார்.
இதன் மூலமாக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். இதனிடையே இன்றைய இன்னிங்ஸில் விராட் கோலியின் ரன்னிங் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுனில் நரைன் வீசிய 15வது ஓவரின் 5வது பந்தில் விராட் கோலி அடித்த பந்து ஸ்வீப் கவர் திசையில் நின்றிருந்த ரிங்கு சிங் கைகளுக்கு சென்றது. மிகவும் வேகமாக அந்த பந்து ஃபீல்டரிடம் சென்றதால், 2வது ரன்னுக்கு விராட் கோலி ஓட மாட்டார் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் ரிங்கு சிங் பந்தை பிடித்த வேகத்தில் மிகவும் விரைவாக விக்கெட் கீப்பருக்கு த்ரோ செய்தார். இதன் மூலமாக விராட் கோலி 2வது ரன்னுக்கு மீண்டும் திரும்பியது தெரிந்தது. ரிங்கு சிங் த்ரோ செய்த பந்தை விக்கெட் கீப்பர் பில் சால்ட் பிடித்து வேகமாக ரன் அவுட் செய்தார். அப்போது விராட் கோலி அசத்தலாக ஒரு டைவ் அடித்து க்ரீஸிற்கு வந்தார். இருப்பினும் விராட் கோலி ரன் அவுட் செய்யப்பட்டாரா என்ற குழப்பம் எழுந்தது.
இதனால் முடிவு 3வது நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அந்த ரீப்ளேவில் விராட் கோலி டைவ் அடித்து சரியான நேரத்தில் உள்ளே வந்தது தெரிய வந்தது. அந்த ஓவருக்கு முன்பாக தான் விராட் கோலி அதிகமாக மூச்சு வாங்கி கொண்டிருந்தார். ஆனாலும் அந்த ரன்னை சரியான நேரத்தில் ஓடி எடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு விராட் கோலியின் ஃபிட்னஸே முழுமையான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றனர்.