பெங்களூர் : ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் கிளென் மேக்ஸ்வெல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதை முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது ஆர்சிபி அணி. இந்த ஐபிஎல் தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் ஒவ்வொரு அணிகளும் வெற்றிபெற தீவிரமாக உள்ளனர். சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்று கணக்கிட்டு செயல்படுகின்றனர்.

ஆனால் ஆர்சிபி அணி மட்டுமே சொந்த மண்ணில் வெல்வதற்கு இன்று வரை என்ன செய்வதென புரியாமல் திண்டாடி வருகிறது. இந்த சீசனில் மட்டும் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது ஆர்சிபி. அதிலும் ஆர்சிபி அணியின் பரம எதிரிகளில் ஒன்றாக லக்னோ மற்றும் கேகேஆர் அணிகளிடமே தோல்வியடைந்துள்ளது. இதனால் இரு அணிகளும் சோசியல் மீடியா பக்கங்களில் ஆர்சிபியை பொளந்து கட்டி வருகின்றனர்.
கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் ஆர்சிபி அணியின் பவுலிங் சற்று முன்னேற்றமடைந்துள்ளது. ஆனால் ஆர்சிபி அணியின் தோல்விக்கு அந்த அணியின் பேட்டிங்கே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடி வெறும் 31 ரன்களை மட்டுமே மேக்ஸ்வெல் சேர்த்துள்ளார்.
இதுகுறித்து கேகேஆர் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி பேசுகையில், கிளென் மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி ஏலத்திற்கு கூட விடாமல் தக்க வைத்து கொண்டது. சம்பளத்தை மட்டும் நேரம் தவறாமல் விரைவாக வாங்கும் மேக்ஸ்வெல், ஆட்டத்தில் மட்டும் கோட்டைவிடுகிறார். அவரிடம் திறமை உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆர்சிபி அணிக்காக அந்த திறமை வெளிப்படவில்லையே.
பஞ்சாப் அணியில் இருக்கும் போதே அவரிடம் கன்சிஸ்டன்சி இருந்ததில்லை. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை கன்சிஸ்டன்சி ரொம்ப முக்கியம். ஆர்சிபி அணி ஏபி டி வில்லியர்ஸின் ஆட்டத்தை இப்போதும் மிஸ் செய்கிறது. கேமரூன் க்ரீன் ஆஸ்திரேலியா அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். அவரையும் பெங்களூர் அணி சரியாக பயன்படுத்தவில்லை. கடந்த போட்டியில் நம்பர் 3ல் சிறப்பாக அவர் விளையாடியும், இந்த போட்டியில் பட்டிதர் களமிறக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.