பெங்களூரு : இதுவரை இரண்டு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் மயங்க் யாதவ் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக 155 கிலோ மீட்டர் வேகத்துக்கும் அதிகமான பந்துகளை வீசி சாதனை படைத்து இருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார் மயங்க் யாதவ். இந்தப் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது.

அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி துவக்க வீரர்கள் கோலி மற்றும் டு பிளேசிஸ் விக்கெட்களை இழந்து நிதானமாக ரன் சேர்த்து வந்த நிலையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தன் மின்னல் வேக பந்துவீச்சால் வரிசையாக வீழ்த்தினார் அசாதாரணமாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிய மயங்க் யாதவ் கிளென் மேக்ஸ்வெல்லை டக் அவுட் செய்தார். அடுத்து மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் கேமரான் கிரீன் விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் ரஜத் படிதார் விக்கெட்டை வீழ்த்தினார்.
மேலும், இந்தப் போட்டியில் 156.7 கிமீ வேகத்தில் பந்து வீசி இந்த ஐபிஎல் தொடரின் மிக அதிவேக பந்தை பதிவு செய்தார். முன்னதாக தனது முதல் போட்டியில் அவர் 155.8 கிமீ வேகத்தில் பந்து வீசி இருந்தார். தனது சாதனையை தானே முந்தினார். மேலும், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் நான்காவது அதிவேக பந்தை வீசி இருக்கிறார்.
அது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் 155 கிமீ வேகத்துக்கும் அதிகமாக அதிக பந்துகளை வீசிய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையையும் செய்தார். இத்தனைக்கும் இரண்டே போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். வெறும் 8 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி இருக்கிறார். அதற்குள் இந்த இமாலய சாதனையை செய்து இருக்கிறார்.