பெங்களூரு : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது.
அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த ஸ்காட் ஸ்டைரிஸ் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இடையே ஒரு போட்டி எழுந்தது. ஸ்காட் ஸ்டைரிஸ் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆவார். அவர் ஓய்வுக்கு பின்னும் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு ஆதரவாகவே பேசி வருபவர். அதே போல, ஏபி டிவில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் வீரர். அவர் விராட் கோலி மற்றும் பெங்களூரு அணிக்கு ஆதரவாகவே எப்போதும் பேசி வருபவர்.

அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. டிவில்லியர்ஸ் பெங்களூரு அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என்றார். ஆனால், ஸ்காட் ஸ்டைரிஸ் இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றார்.
அதன் முடிவில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் இனி அந்த அணி ஆடும் ஐபிஎல் போட்டிகளில் எல்லாம் ஸ்காட் ஸ்டைரிஸ் பெங்களூரு சட்டையை அணிந்து கொள்வதாகவும், ஒருவேளை பெங்களூரு அணி தோல்வி அடைந்தால் நாளை நடக்க உள்ள சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் சிஎஸ்கே அணியின் சட்டையை அணிந்து கொள்ள வேண்டும் எனவும் சவால் விட்டு ஒப்பந்தம் செய்தனர்.
ஆனால், பெங்களூரு அணியின் சேஸிங்கில் விராட் கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து பெங்களூரு அணியை வெற்றி பெறச் செய்தார். அவரது அந்த ஆட்டத்தால் ஸ்காட் ஸ்டைரிஸ் இந்த சவாலில் தோல்வி அடைந்தார். அவர் வார்த்தைப் படி அவர் இனி ஆர்சிபி அணி ஆடும் போட்டிகளில் எல்லாம் அந்த அணியின் சட்டையை அணிய வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.