அகமதாபாத் : சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் தோனிக்கு அவரது கடைசி போட்டியில் அவமரியாதை செய்ததன் மூலம் ஆர்சிபி அணியின் உண்மை முகம் வெளி வந்ததாக சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் 17வது முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முடியாமல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்ற ஆர்சிபி அணி, 7வது போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறியுள்ளது.

இதனால் ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மைதானத்தில் இருந்து ஓய்வறைக்கு சென்றார். இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறுவது குறித்து சூசகமாக கூறியிருந்தார். ஆனால் இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 326 ரன்களை குவித்தார்.
இதனால் தினேஷ் கார்த்திக் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி தோல்வியடைந்த பின், ஆர்சிபி வீரர்கள் அனைவரும் இணைந்து தினேஷ் கார்த்திக்கை முன் நடக்கவிட்டு மரியாதை கொடுத்தனர்.
விராட் கோலி, டூ பிளசிஸ், சிராஜ் அனைவரும் தினேஷ் கார்த்திக்கை கட்டிபிடித்து வாழ்த்து கூறியதோடு, கைகளை தட்டி உற்சாகம் செய்தனர். அதேபோல் ஆர்சிபி ரசிகர்களும் தினேஷ் கார்த்திக்கிற்கு எழுந்து நின்று மரியாதை அளிக்க, விக்கெட் கீப்பர் கிளவுசை உயர்த்தி காட்டி நன்றி தெரிவித்தார். இதன்பின் சிஎஸ்கே ரசிகர்களும் தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்து கூறி வந்தனர்.
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கின் கடைசி போட்டியில் ஆர்சிபி அணி வீரர்கள் மரியாதை கொடுத்தது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் சிஎஸ்கே ஜாம்பவான் தோனி கடைசி போட்டியில் விளையாடும் போது அவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டு ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடியது ஏன் என்று சென்னை அணி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் மூலம் ஆர்சிபி அணியின் உண்மை முகம் வெளி வந்ததாக சிஎஸ்கே ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.