அகமதாபாத் : ஆர்சிபி அணியின் தோல்வியை சிஎஸ்கே அணி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வரும் சூழலில், விராட் கோலியின் வார்த்தைகள் ட்ரெண்டாகி வருகிறது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததால், ஆர்சிபி அணியின் கோப்பை மீண்டும் பறிபோனது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே சேர்த்தது.

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தல் வெற்றியை பெற்றது. இதனால் அகமதாபாத்தில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சோகமாக காணப்பட்டார். இந்த சீசன் முழுக்கவே விராட் கோலியின் அக்ரஷன் கூடுதலாக இருந்தது. விராட் கோலியின் அக்ரசிவ் குணம், ஆர்சிபி அணி வீரர்களுக்கும் தொற்றிக் கொண்டது.
இதனிடையே சிஎஸ்கே அணியை வீழ்த்திய போது ஆர்சிபி அணி மட்டுமல்லாமல் ஆர்சிபி அணி ரசிகர்கள் அதிகமாக கொண்டாடினார்கள். சிஎஸ்கே ரசிகர்களை சீண்டுவது, மைதானத்திற்கு வெளியில் அத்துமீறியது, சிஎஸ்கே வீரர்கள் பயணித்த பேருந்து முன் ஆவேசமாக கொண்டாடியது என்று ஏராளமான வீடியோக்கள் வெளியாகின.
இது சிஎஸ்கெ ரசிகர்கள் கோபமடைய செய்தது. இந்த நிலையில் ஆர்சிபி அணி தோல்வியடைந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதேபோல் வீரர்களை நேரடியாக வம்புக்கு இழுக்காமல், திட்டாமல் சோசியல் மீடியாவில் ஆர்சிபி ரசிகர்களை பொளந்து கட்டி வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மீம் திருவிழாவாக சோசியல் மீடியா காட்சியளிக்கிறது.
இதனால் ஆர்சிபி ரசிகர்கள் பலரும் எல்லை மீறி விமர்சிக்கவோ கிண்டல் செய்யவோ தேவையில்லை என்று பதிலளித்து வருகின்றனர். இதற்கு விராட் கோலியின் பாணியில் சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த சீசனில் கம்பீரை வம்புக்கு இழுத்த பின் விராட் கோலி, If you can't take it, Better don't give it என்று கூறி இருப்பார். அதேபோல் ஆர்சிபி அணி ரசிகர்கள் அமைதி காத்திருந்தால், இப்போது நாங்கள் கலாய்க்க தேவை வந்திருக்காது என்று கூறி வருகின்றனர்.