ஐபிஎல் பிளே ஆப் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 2 சுற்றுக்கு செல்லும்.
தோல்வி அடையும் அணி தொடரை விட்டு செல்லும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இன்றைய ஆட்டத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். மேலும் இந்த ஆடுகளத்தில் நடைபெற்ற சிஎஸ்கே குஜராத் அணிக்கு இடையிலான ஆட்டத்தில், 430 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது. இதனால் சேஸிங் செய்யும் அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த சஞ்சு சாம்சன், ஆடுகளத்தின் சூழலை பார்த்தும் பனிப்பொழிவு இருக்கும் என்பதை கணித்தும் தாங்கள் முதலில் பந்து வீச முடிவு எடுத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இதுபோன்ற மக்கள் கூட்டத்திற்கு முன் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.
நமக்கு மோசமான நாட்கள் அமைந்தாலும் சரியான உத்வேகத்துடன் விளையாடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று குறிப்பிட்ட சாம்சன்,இந்த தொடர் முழுவதும் வீரர்களை காயம் அடையாமல் பாதுகாப்பது மிகவும் கடினமாக இருந்தது என்று குறிப்பிட்டார். மேலும் சிம்ரன் ஹிட்மேயர் அணிக்கு திரும்பியிருப்பதாகவும் சஞ்சு சம்சம் கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் தாங்களும் முதலில் பந்து வீச தான் நினைத்தோம். நேற்றைய ஆட்டத்தில் பனிபொழிபவு மிகவும் அதிகமாக இருந்தது. மேலும் ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முதலில் சாதகமாக இருந்தது. எனினும் எங்களுடைய திறனில் நாங்கள் கவனம் செலுத்துவோம் சிஎஸ்கேவுக்கு எதிரான கடைசி போட்டியில் நாங்கள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றோம். நாக் அவுட் போன்ற போட்டிகளில் விளையாடும் போது நீங்கள் ஒரு சூப்பர் மேன் போல் இருக்க வேண்டும். எங்கள் அணி வீரர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று டுபிளசிஸ் கூறினார்.