அகமதாபாத் : ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்த நிலையில், 3வது நடுவர் கொடுத்த தவறான தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி வந்த ஆர்சிபி அணி, 14.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்களை எடுத்திருந்தது. அப்போது ஆர்சிபி அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார். இதன்பின் அந்த ஓவரின் 3வது பந்தை வீச ஆவேஷ் கான் தயாரானார்.

அந்த பந்து நேராக தினேஷ் கார்த்திக் கால்களில் கட்டியிருந்த பேடில் அடித்து சென்ற நிலையில், நடுவரிடம் அவுட் என்று ராஜஸ்தான் அணியினர் அப்பீல் செய்தனர். இதனையடுத்து கள நடுவர் அவுட் கொடுக்க, உடனடியாக தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்ட தொடங்கினார். ஆனால் மறுமுனையில் நின்றிருந்த லோம்ரோர் வேகமாக தினேஷ் கார்த்திக்கை அழைத்து டிஆர்எஸ் அப்பீலுக்கு செல்லுமாறு கோரினார்.
இதன்பின் பெரிய நம்பிக்கையில்லாமல் தினேஷ் கார்த்திக் டிஆர்எஸ் அப்பீலுக்கு செல்ல, 3வது நடுவர் அனில் சவுத்ரி ஆராய்ந்தார். அந்த ரீ-ப்ளேவில் தினேஷ் கார்த்திக்கின் பேட்டில் பால் பட்டு சென்றது போல் தெரிந்தது. பின்னர் ஸ்னிக்னோ மீட்டரில் பார்த்த போது பால் உரசி செல்வதாக தெரிந்தது. ஆனால் ஸ்னிக்னோ மீட்டரில் பார்த்த போது பேட் தினேஷ் கார்த்திக்கின் கால்களில் அடித்தது தெரிய வந்தது.
இதனால் பந்து நேராக பேடில் அடித்தது உறுதியானது. ஆனால் 3வது நடுவர் ரீ-ப்ளேவில் சரியாக பந்து பேட்டில் அடித்ததாக நினைத்து நாட் அவுட் என்று தீர்ப்பளித்தார். இதனை களத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த ராஜஸ்தான் அணியின் ஆவேஷ் கான் மற்றும் ரியான் பராக் இருவரும் பேட் தான் அவரின் பேடில் அடித்ததாக கூறினார்.
அதேபோல் ஓய்வறையில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த பயிற்சியாளர் சங்கக்காரா, நேராக நடுவரிடம் சென்று சண்டையில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட பெவிலியனை நோக்கி தினேஷ் கார்த்திக் நடந்து சென்ற போதும், 3வது நடுவர் சரியாக ரீ-ப்ளேவில் பார்க்காமல் நாட் அவுட் என்று தீர்ப்பளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.