ஜெய்ப்பூர் : நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதல்முறையாக பவர் பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 19வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. சொந்த மண்ணிலேயே 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால் ரசிகர்களிடையே அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஆர்சிபி அணியின் தோல்விக்கு கேப்டன் டூ பிளசிஸ்-ன் மோசமான பேட்டிங் ஃபார்ம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் டூ பிளசிஸ் 35 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதேபோல் பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள் டூ பிளசிஸ் ஆட்டமிழந்தார். அவரின் விக்கெட் கைப்பற்றப்பட்டதால், சிஎஸ்கே அணி கம்பேக் கொடுத்தது.
தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளசிஸ் வெறும் 3 ரன்களில் வெளியேறினார். அதேபோல் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்களிலும், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளசிஸ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் 4 போட்டிகளிலும் பவர் பிளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து வெளியேறியது ஆர்சிபி அணிக்கும், விராட் கோலிக்கும் பின்னடைவாக மாறியது.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் பொறுப்புடன் விளையாடி வருகிறார். முதல்முறையாக இந்த சீசனில் முதல் விக்கெட்டுக்கு விராட் கோலி - டூ பிளசிஸ் கூட்டணி இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் குவித்தது.
இதன் மூலம் ஆர்சிபி அணி மரண மாஸ் கம்பேக் கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. டூ பிளசிஸ் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்துள்ளதால், ராஜஸ்தான் மண்ணில் ஆர்சிபி அணி தனது கொடியை நாட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் போல்ட், பர்கர், அஸ்வின், சாஹல் உள்ளிட்டோராலும் இவர்கள் இருவரின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.