அகமதாபாத் : எலிமினேட்டர் போட்டிக்கு முன்பாக விராட் கோலிக்கு மெசேஜ் செய்தது தொடர்பாக ராஜஸ்தான் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 178 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் சீனியர் வீரர் அஸ்வின் 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அஸ்வின் பவுலிங்கில் ரஜத் பட்டிதார் கொடுத்த கேட்சை துருவ் ஜுரெல் தவறவிட்டார். அதையும் பிடித்திருந்தால் அஸ்வின் 3 விக்கெட்டை கைப்பற்றி இருப்பார். அதேபோல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக பிளே ஆஃப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் பேசுகையில், ஐபிஎல் தொடரை இரண்டாக பிரித்து கொள்வேன். ஏனென்றால் முதல் பாதியில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினேன். டெஸ்ட் தொடரில் இருந்து வரும் போது காயமும் ஏற்பட்டது. ஆனால் இரண்டாம் பாதியில் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்ததாக நினைக்கிறேன். இந்த போட்டிக்கு முன் விராட் கோலி மெசேஜ் அனுப்பினேன். களத்தில் இன்னொரு முறை மோதி பார்க்கலாம் என்று கூறினேன்.
அதேபோல் மைதானத்தில் பனிப்பொழிவு கொஞ்சம் அதிகமாகி வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் பெரும்பாலான போட்டிகளில் பனிப்பொழிவு வரவில்லை என்று நினைக்கிறேன். ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை கடந்த சில போட்டிகளாக சரியாக செயல்படவில்லை. பேட்டிங்கில் எங்களுக்கு ரீ-செட் பட்டனை அழுத்த வேண்டிய நேரமிது.
ஆர்சிபி அணியின் இலக்கு சராசரிக்கும் குறைவானது என்றே நினைப்பதாக தெரிவித்துள்ளார். நாக் அவுட் போட்டிகளில் அஸ்வின் வழக்கமாக சிறப்பாக செயல்படுவார். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக பவுலிங் செய்த வீரர்களில் அஸ்வின் மட்டுமே பவுண்டரி கொடுக்காமல் பவுலிங் செய்தது குறிப்பிடத்தக்கது.