அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பயணம் முடிவடைந்த நிலையில், மைதானத்தில் இருந்த குட்டி ஆர்சிபி ரசிகர் கதறி அழுத வீடியோ அந்த அணியின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி அணி வெளியேறியுள்ளது. தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்ற ஆர்சிபி அணி, இந்த சீசனில் கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன் காரணமாகவே சிஎஸ்கே அணியை வீழ்த்திய பின் ஆர்சிபி அணியின் கொண்டாட்டம் எல்லை மீறியது.
ஆனால் வழக்கம் போல் ஆர்சிபி அணி 17வது முறையாகவும் தோல்வியை சந்தித்து, முதல் கோப்பையை வெல்லும் கனவையும் பறிகொடுத்துள்ளது. இந்த போட்டியை காண ஆர்சிபி அணியின் ரசிகர்கள் பலரும் அகமதாபாத் மைதானத்தில் கூடினர். ராஜஸ்தான் அணியை விடவும் ஆர்சிபி அணியின் கொடிகளே அதிகமாக தென்பட்டன.
அதேபோல் விராட் கோலியின் ஜெர்சியை அணிந்து ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அதுமட்டுமல்லாமல் அனுஷ்கா சர்மாவும் மைதானத்திற்கு வந்ததால், பரபரப்பான சூழல்களிலும் அவரின் பக்கமே கேமரா திரும்பியது. ஆனால் ஃபெர்குசன் பவுலிங்கில் ரோவ்மன் பவல் அடித்த சிக்சரால் ஆர்சிபி அணியின் பயணம் முடிவடைந்தது.
இதன் காரணமாக விராட் கோலி தலையை குனிந்து சோகமாக நடந்து வந்தார். அப்போது மைதானத்தில் இருந்த குட்டி ஆர்சிபி ரசிகர் ஒருவர், அவரின் தந்தையை மீது சாய்ந்து கண்ணீர் சிந்தினார். ஒவ்வொரு முறையும் ஆர்சிபி அணி தோல்வியடையும் போது ஆர்சிபி அணி ரசிகர்கள் சிலர் கண்ணீர் சிந்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.