அகமதாபாத் : 22 வயதில் ரியன் பராக், ஜுரெல் மற்றும் ஜெய்ஸ்வால் மூவரும் இவ்வளவு அனுபவத்துடன் சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சியளிப்பதாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் காரணமாக ராஜஸ்தான் அணி குவாலிஃபையர் 2 போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த வெற்றி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில், கிரிக்கெட்டும், வாழ்க்கையும் என் வாழ்க்கையில் கற்றுக் கொடுத்தது ஒன்று தான். எப்போதும் நல்லதும், கெட்டதும் இருக்கும் என்பது தான். ஆனால் தோல்வியடையும் போது கம்பேக் கொடுப்பதற்கான மன உறுதியை கொண்டிருக்க வேண்டும். இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என்று மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டோம். அதேபோல் பவுலர்களுக்கு பாராட்டுகளை கூற வேண்டும்.
பவுலர்கள் எப்போதும் எதிரணி பேட்ஸ்மேன்களின் மனநிலையை அறிந்து ஃபீல்ட் செட் செய்கிறார்கள். அதேபோல் பயிற்சியாளர் சங்கக்காரா மற்றும் ஷேன் பாண்ட் இருவருக்கும் வெற்றியில் பங்களிக்க வேண்டும். ஏனென்றால் ஹோட்டலில் அமர்ந்து ஏராளமான திட்டங்களுடன் வருகிறார்கள். அதேபோல் அஸ்வின் மற்றும் போல்ட் இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். ராஜஸ்தான் அணியில் அனுபவமும், இளமையும் கலந்து வீரர்கள் இருக்கிறார்கள்.
ஜெய்ஸ்வால், ஜுரெல் மற்றும் ரியன் பராக் மூவரும் 22 வயதில் இருப்பவர்கள். அவர்களுக்கு கிடைத்த சிறிய அனுபவத்தை கொண்டு இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது நிச்சயம் அற்புதமானது. அதேபோல் நானும் 100 சதவிகிதம் நல்ல உடல்நிலையுடன் இல்லை. ஓய்வறையில் சிறிய காயம், உடல்நலப் பிரச்சனை உள்ளது. நாளை மீண்டும் பயணம் செய்து, ஒருநாள் பயிற்சிக்கு பின் மீண்டும் ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.