அகமதாபாத் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி எளிதாக வெற்றிபெறும் என்று இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் - ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன. அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, அடுத்ததாக குவாலிஃபையர் 2வது போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடும். சமபலம் வாய்ந்த இரு அணிகள் விளையாடும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த நிலையில் எலிமினேட்டர் போட்டியில் யார் வெல்வார்கள் என்று இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4ல் தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மழையால் பயிற்சி செய்யாமல் இருக்கின்றனர்.
கேகேஆர் அணியை போல் ஸ்பெஷலாக எதையும் செய்யவில்லை என்றால், மீண்டும் ஒரு சார்பான போட்டியாகவே இருக்கும். இந்த போட்டியில் சாதாரணமாக ராஜஸ்தான் அணியை ஆர்சிபி அணியால் வெல்ல முடியும். இது நடக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம். ஆர்சிபி அணியின் கம்பேக் நிச்சயம் மகத்தான ஒன்று தான்.
ஏனென்றால் மோசமான நிலையில் இருந்து கம்பேக் கொடுப்போம் என்று நம்பிக்கை வைத்ததே மிகப்பெரிய விஷயம். அதற்கு டூ பிளசிஸ், விராட் கோலி உள்ளிட்ட மற்ற சீனியர் வீரர்களை பாராட்ட வேண்டும். அவர்கள் தான் ஜூனியர் வீரர்களுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளனர். மற்ற அணிகளாக இருந்திருந்தால், நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்று சலிப்படைந்திருப்பார்கள். ஆனால் ஆர்சிபி அப்படி நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணி கடைசியாக விளையாடிய 5 ஐபிஎல் தொடர்களில், 4வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் விளையாடியுள்ளது. சிஎஸ்கே, மும்பை அணிகளுக்கு பின் அதிக முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணி என்ற பெருமையையும் ஆர்சிபி பெற்றுள்ளது. இதனால் இந்த சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.