அகமதாபாத் : விராட் கோலியை விடவும் அதிகளவிலான ரசிகர்கள் தோனியின் பக்கம் நிற்பதற்கான காரணம் குறித்து பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கூறியுள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை கனவு முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல் இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலமாக பிளே ஆஃப் போட்டிகளில் அதிக போட்டிகளில் தோல்வியடைந்த அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.

இதுவரை 16 பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 10 முறை தோல்வியை சந்தித்துள்ளது. இதனிடையே ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது அணியை சேர்ந்த வீரரான யாஷ் தயாளையே கண்டபடி திட்டிய சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஆட்டத்தில் ஆர்சிபி அணி தரப்பில் இளம் வீரர் யாஷ் தயாள் 17வது ஓவரை வீசுவதற்காக அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் ஹெட்மயர் 2 பவுண்டரிகளை அடிக்க, மொத்தமாக 11 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கோபமடைந்த விராட் கோலி, பவுண்டரி லைனில் நின்று கொண்டு யாஷ் தயாளை ஆக்ரோஷமாக திட்டினார். இது அவரை பின்தொடரும் பிரத்யேக கேமராவில் பதிவிவாகியது.
இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் வர்ணனையாளர்கள் மத்தியிலும் ரசிக்கப்படவில்லை. இதுகுறித்து வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே பேசுகையில், கடைசி ஓவர்களின் போது விராட் கோலி, இளம் வீரரான யாஷ் தயாளை ஆவேசமாக திட்டியதை பார்க்க முடிந்தது. இதனை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. இதன் காரணமாக தான் ரசிகர்கள் பலரும் விராட் கோலியை விடவும் தோனியின் பக்கம் அணிவகுத்து நிற்கின்றனர்.
இளம் வீரர்களை எப்படி நடத்த வேண்டும் என்று தோனியிடம் இருந்து விராட் கோலி கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். சிஎஸ்கே போட்டியின் போதே சிஎஸ்கே ரசிகர்களை பார்த்து சைலன்ஸ் என்று சிக்னல் காட்டியதோடு, சில சர்ச்சைக்குரிய செயல்களிலும் விராட் கோலி ஈடுபட்டார். இதனால் விராட் கோலி ஆக்ரோஷம் மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.