ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூர் மைதானத்தில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதல்முறையாக அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. ஜெய்ப்பூர் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் விராட் கோலி ரசிகர்கள் சோகமாக இருந்தனர். ஏனென்றால் 17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் விராட் கோலி ஜெய்ப்பூர் மைதானத்தில் ஒருமுறை கூட அரைசதம் அடித்ததில்லை.

அதிகபட்சமாக ஜெய்ப்பூர் மைதானத்தில் 39 ரன்கள் தான் விராட் கோலி அடித்துள்ளார். இதனால் விராட் கோலி வரலாற்றை மாற்றுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் இந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 2 அரைசதங்கள் உட்பட 181 ரன்களை சேர்த்து ஆரஞ்ச் கேப் வின்னராக வலம் வருகிறார். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி அசத்தலாக தொடங்கினார்.
பர்கர் வீசிய 2வது ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசிய விராட் கோலி, தொடர்ந்து 3வது ஓவரில் போல்ட் பந்திலும் பவுண்டரி விளாசினார். இதன் பின் மீண்டும் அட்டாக்கில் வந்த பர்கர் பவுலிங்கில் அசாத்திய சிக்சரை விளாசி அசத்தினார். பவர் பிளே ஓவர்களில் 25 பந்துகளில் 32 ரன்களை சேர்த்த விராட் கோலி, அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதன் மூலமாக 39 பந்துகளில் சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டினார்.
இதன் மூலம் ஜெய்ப்பூர் மைதானத்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 3வது அரைசதத்தை விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் 7,500 ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 4,000, 5,500, 6000, 6,500, 7000, 7,500 ஆகிய ரன்களை விளாசிய முதல் வீரர் விராட் கோலி தான். இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தனது இடத்தை நிச்சயம் பிடிக்கும் முயற்சியில் இருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றுள்ளது.