பெங்களூர் : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற பின் ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்களை விளாசியது. சிறப்பாக விளையாடிய ட்ராவிஸ் ஹெட் 102 ரன்களும், கிளாசன் 67 ரன்களும், அப்துல் சமாத் 37 ரன்களும் விளாசினர்.

இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வியை சந்தித்துள்ளது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன்களும், டூ பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்களும், விராட் கோலி 20 பந்துகளில் 42 ரன்களும் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலமாக ஐதராபாத் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசுகையில், நான் பேட்ஸ்மேனாக இருந்திருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. நிச்சயம் அற்புதமான சில காட்சிகளையும் பார்க்க முடிந்தது. இதுபோன்ற போட்டிகள் கூடுதல் உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற போன்ற போட்டிகளில் ஒரு ஓவருக்கு 7 அல்லது 8 ரன்களை விட்டுக் கொடுத்தால் கூட மிகப்பெரிய இம்பேக்ட் கொடுக்க முடியும்.
இந்த போட்டியில் பிட்சை கண்டறியும் முயற்சியை பாதியோடு கைவிட்டுவிட்டேன். சின்னச்சாமி மைதானம் தார் ரோட்டை போல் மாறிவிட்டது. இந்த சீசனில் எங்களின் 4வது வெற்றி இது. பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் வெளியேறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் 4 ஓவர்கள் முழுமையாக வீசி 45 ரன்களுக்கு கீழ் ரன்களை விட்டுக் கொடுத்த ஒரே பவுலர் பாட் கம்மின்ஸ் தான்.
வெறும் 43 ரன்களை விட்டுக் கொடுத்த அவர், 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியின் டாஸின் போது சின்னச்சாமி மைதானத்தில் 240 ரன்கள் அடித்தால் கூட அது சராசரி ஸ்கோர் என்று கம்மின்ஸ் கூறியிருந்தார். அவர் கூறியதை போலவே ஐபிஎல் தொடரில் இரு அணிகளால் இணைந்து அதிக ரன்கள் விளாசப்பட்ட டி20 போட்டியாக சாதனை படைக்கப்பட்டுள்ளது.