அகமதாபாத் : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் போல்ட் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை குவித்துள்ளது. ஆர்சிபி அணி தரப்பில் அதிகபட்சமாக பட்டிதார் 34 ரன்களை சேர்த்தார்.

அதேபோல் ராஜஸ்தான் அணி தரப்பில் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி வெறும் 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் ராஜஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான போல்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஏனென்றால் பவர் பிளேவில் 3 ஓவர்களை வீசிய போல்ட் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் போல்ட் வீசிய 18வது ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 4 ஓவர்களில் வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை போல்ட் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 24 பந்துகளில் மொத்தமாக 14 டாட் பால்களை வீசி மிரட்டியுள்ளார். பவர் ஓவர்களில் அசாத்தியமாக ஆடிய விராட் கோலி, டூ பிளசிஸ் இருவரும் போல்ட் பவுலிங்கில் அமைதி காத்தனர்.
அதேபோல் இன்றைய ஆட்டத்தில் பவர் பிளேவில் டூ பிளசிஸின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக போல்ட் முக்கிய சாதனையையும் படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு போல்ட் முன்னேறியுள்ளார். இதுவரை போல்ட் 59 விக்கெட்டுகளை பவர் பிளேவில் மட்டும் வீழ்த்தி இருக்கிறார்.
அதேபோல் முதலிடத்தில் 71 விக்கெட்டுகளுடன் புவனேஷ்வர் குமார் இருக்கிறார். சந்தீப் சர்மா 59 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தை போல்ட் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதேபோல் சிஎஸ்கே அணியின் தீபக் சஹர் மற்றும் குஜராத் அணியின் உமேஷ் யாதவ் இருவரும் 58 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் உள்ளனர். 2020ஆம் ஆண்டு முதல் போல்ட் ஐபிஎல் தொடரில் பவர் பிளேவில் மட்டும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.