மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணி சமீபத்தில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி இருந்தது. அது குறித்து ஒரு முக்கிய தகவல் கூறப்படுகிறது. மொத்தமாக அணியை விட்டே நீக்க மும்பை அணி திட்டமிட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான திட்டமிடலில் ஒரு பகுதி தான் இப்போது நடந்திருக்கிறது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் ரோஹிதை நீக்க இருப்பதால், அதற்கு முன்னர் வேறு ஒரு கேப்டனை தயார் செய்து விட வேண்டும் என்ற முடிவோடு தான் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து இருக்கிறது மும்பை இந்தியன்ஸ். ஏன் ரோஹித் சர்மாவை அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்துக்கு முன் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் சாமர்த்தியம் உள்ளது.

ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை ஐபிஎல் அணிகள் தங்களின் அணியில் உள்ள வீரர்களில் நான்கு பேரை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். மற்ற வீரர்கள் அனைவரும் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள். அதன் பின் மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறும். அதில் ஒவ்வொரு அணியும் வீரர்களை வாங்கி தங்கள் அணியை மீண்டும் புதிதாக தயார் செய்து கொள்ள வேண்டும். அப்போது வாங்கும் வீரர்கள் மற்றும் தக்க வைக்கப்பட்ட அந்த நான்கு வீரர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அணியில் தொடர்வார்கள்.
அடுத்து 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் இந்த மெகா ஏலம் நடைபெற உள்ளது. அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மாவை தக்க வைப்பது அணிக்கு சுமையாக மாறும் என கருதுகிறது. ரோஹித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகும் நிலையில் அவரை இன்னும் ஓராண்டு கழித்து, அடுத்த மூன்று ஆண்டுகள் தக்க வைத்தால் 40 வயது வரை அவர் அணியில் இருப்பார். அவரால் 37 வயதுக்கு பின் முழு உடற்தகுதியுடன் விளையாட முடியுமா? என்பது தெரியாது.
அதே சமயம், 30 வயதாகும் ஹர்திக் பாண்டியாவை தக்க வைத்தால் அது அணிக்கு பலனளிக்கும் என மும்பை அணி கருதுகிறது. அதே சமயம், இப்போது ஒரு கேப்டனை மாற்றினாலும் முந்தைய கேப்டன் அணியில் இருந்து அவரை வழிநடத்த வேண்டும் எனவும் மும்பை அணி திட்டமிட்டு இருக்கிறது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்களாக இருந்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் விலகிய போதும் அவர்கள் அணியில் தொடர்ந்து இடம் பெற்று அடுத்து வந்த கேப்டனுடன் சேர்ந்து செயல்பட்டனர்.
அதே வழிமுறையில் ரோஹித் சர்மா 2023 ஐபிஎல் தொடரில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து செயல்படுவார். அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்துக்கு முன் ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. இந்த தெளிவான திட்டமிடல் காரணமாகவே ரசிகர்கள் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறது.