துபாய்: ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அதிகளவில் ஏலம் எடுக்கப்பட்டதற்கு பின் அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பல்வேறு அணிகளிலும் பயிற்சியாளர்களாக இருப்பதே காரணமாக உள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் 30 வெளிநாட்டு வீரர்கள் தேவைப்பட்ட நிலையில், அதில் அதிகளவில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த வீரர்களாக இருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டிராவிஸ் ஹெட் ரூ.6.8 கோடிக்கும், பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கும் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டனர்.

அதேபோல் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணியாலும் வாங்கப்பட்டார். ஆஸ்திரேலியா அணியின் ஆஷ்டன் டர்னரை லக்னோ அணி ரூ.1 கோடிக்கும், ஸ்பென்சர் ஜான்சன் ரூ.10 கோடிக்கு குஜராத் அணியாலும், ஜை ரிச்சர்ட்சன் ரூ.5 கோடிக்கு டெல்லி அணியாலும் ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த வீரர்களுக்கு மட்டும் ரூ.68.05 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர்களாக இருப்பதும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங், ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் விட்டோரி (ஆஸ்திரேலியா ஸ்பின் ஆலோசகர்), லக்னோ அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் பேட் கம்மின்ஸை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள் இருக்கும் அணிகளிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐதராபாத் அணிக்கு பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவருமே தேவைப்படாத சூழலில், இருவரையும் வாங்கும் முடிவை விட்டோரி எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஜஸ்டிங் லாங்கர் எந்த காரணத்திற்காக ஆஷ்டன் டர்னரை வாங்கினார் என்பது இப்போது வரை புரியாத புதிர் தான். குஜராத் அணி ஸ்பென்சர் ஜான்சனை ரூ.10 கோடிக்கு வாங்கியதற்கு டெல்லி அணியின் போட்டியாக காரணம். அதேபோல் ஜை ரிச்சர்ட்சனுக்கு ரூ.5 கோடி கொடுத்து வாங்கும் தேவை டெல்லி அணிக்கு இல்லை என்று பார்க்கப்படுகிறது. அங்கு ஏற்கனவே மிட்சல் மார்ஷை ரிக்கி பாண்டிங் வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.