மும்பை : இந்திய டி20 அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ரிங்கு சிங், டி20 உலகக்கோப்பை தொடரின் போது அணியில் எப்படியும் இடம் பெறுவார் என சில நாட்கள் முன்பு தகவல்கள் வெளியானது. ஆனால், 2024 ஐபிஎல் தொடருக்கு பின் அவர் அணியில் 11 வீரர்களில் ஒருவராக களமிறங்குவது சந்தேகம் தான் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் வருகையால் பல வீரர்கள் அணியில் வாய்ப்பை இழக்கப் போகும் நிலையில் ரிங்கு சிங் ஃபினிஷர் என்ற அடையாளத்துடன் அணியில் தொடர்வார் என கூறப்பட்டது. ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினாலும் அவர் முன்பு போல முழு உடற்தகுதியுடன் பந்து வீசினால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
ஆனால், டி20 அணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில் 30 வீரர்களை பிசிசிஐ தேர்வுக் குழு தேர்வு செய்து வைத்துள்ளது. அவர்கள் 2024 ஐபிஎல் தொடரில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தே 2024 டி20 தொடருக்கான அணியில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்போது துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம் பெற வாய்ப்பு உள்ளது. மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இடம் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஐந்தாம் மற்றும் ஆறாம் வரிசையில் இரண்டு அதிரடி பேட்ஸ்மேன்களை ஆட வைக்க வேண்டிய தேவை உள்ளது. அதில் ஒரு விக்கெட் கீப்பரும் இடம் பெற்றாக வேண்டும்.
இதில் ஐந்து அல்லது ஆறாம் வரிசையில் தான் ரிங்கு சிங் களமிறங்க வேண்டும். அந்த இரண்டு இடங்களில் ஒன்றில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அல்லது ஜிதேஷ் சர்மா ஆடுவார்கள் என கூறப்படுகிறது. விக்கெட் கீப்பர்களன இஷான் கிஷன், கே எல் ராகுல் ஃபினிஷர் என்ற அடையாளத்தில் வர மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது. அந்த ஒரு இடம் போக மீதமிருக்கும் ஒரு இடத்தில் தான் ரிங்கு சிங் அல்லது ஹர்திக் பாண்டியா ஆட வேண்டும். இதில் ரிங்கு சிங் பேட்ஸ்மேன் மட்டுமே. ஆனால், பாண்டியா வேகப் பந்துவீச்சாளர் ஆவார். இதில் தான் ஒரு சிக்கல் உள்ளது.
அணியில் நான்கு பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர் போக, ஐந்து பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெறுவார்கள். ஆனால், ஆறு பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பது ஒரு வகையில் நல்ல விஷயம். சில சமயம் ஒரு பந்துவீச்சாளர் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தால் மாற்று பந்துவீச்சாளர் ஒருவர் அணியில் இருப்பது கடைசி ஓவர்களின் போது போட்டியை மாற்ற கை கொடுக்கும்.
அதன்படி பாண்டியாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு முழுவீச்சில் பந்து வீசினால் அவருக்கே அணியில் வாய்ப்பு கிடைக்கும். ரிங்கு சிங் மாற்று வீரராக அணியில் தொடர்வார். அவர் ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம் ஆடி அதிக ரன்கள் குவித்தாலும் கூட அவருக்கான இடம் அணியில் இல்லை எனக் கூறி அவரை ஓரங்கட்ட அதிக வாய்ப்பு உள்ளது.