டெல்லி : இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் அழுவது போன்றும், அவரை தோனி ஆறுதல் கூடி தேற்றுவது போன்றும் ஒரு புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. என்ன நடந்தது என பலரும் கேட்டு வருகின்றனர். உண்மையில் அது ஒரு மாதம் முன்பு நடந்த நிகழ்வு.
கடந்த மாதம் 9ஆம் தேதி அன்று ரிஷப் பண்ட்டின் சகோதரியின் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்துக்கு தோனியும் வந்திருந்தார். மணமக்களை அவர் வாழ்த்தி பேசி இருந்தது அப்போது சமூக ஊடகங்களில் பரவியது. அப்போது ரிஷப் பண்ட் தன் சகோதரி திருமணம் முடிந்து தன்னை விட்டு பிரிய இருக்கிறார் என்பதை எண்ணி கண் கலங்கினார்.

அப்போது அருகில் இருந்த தோனி அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார். அந்த புகைப்படம் தான் இப்போது இணையத்தில் பரவி வருகிறது. ரிஷப் பண்ட்டின் தாய் ஒரு பக்கம் இருந்து பண்ட்டுக்கு ஆறுதல் கூற முயலும் அதே நேரத்தில் ஒரு மூத்த சகோதரனாக தோனியும் அவருக்கு ஆறுதல் கூறி இருந்தது நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.
தோனி ஓய்வு பெற்ற பின் அவரது இடத்தை ரிஷப் பண்ட் தான் நிரப்பினார். இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பராக உருவாகிக் கொண்டு இருந்தார். தன் அதிரடியான பேட்டிங்கால் பல முறை தோற்க வேண்டிய போட்டிகளில் வெற்றி தேடித் தந்தார் ரிஷப் பண்ட். எல்லாம் சரியாக சென்ற போது அவர் கடந்த 2022 டிசம்பர் இறுதியில் விபத்தில் சிக்கினார்.
அதனால், ரிஷப் பண்ட் கடந்த ஓராண்டாக காயம் மற்றும் உடற்தகுதி காரணமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. எனினும், அவர் தோனியுடன் நெருக்கமாகவே இருக்கிறார். தற்போது 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க தன்னை தயார் செய்து வருகிறார். ஐபிஎல் தொடரில் அவர் செயல்பாட்டை வைத்தே அவர் இந்திய அணியில் இடம் பெற முடியும்.