டெல்லி : ரிஷப் பண்ட் கடந்த 14 மாதங்களாக காயத்தில் இருந்து மீண்டு உடற்தகுதிக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். பிசிசிஐ அவருக்கு உடற்தகுதி சான்று அளித்தால் மட்டுமே அவரால் 2024 ஐபிஎல் தொடரில் ஆட முடியும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில், பிசிசிஐ அவருக்கு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக 2024 ஐபிஎல் தொடரில் செயல்பட அனுமதி அளித்து இருக்கிறது. இதை அடுத்து அவர் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்று 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஐபிஎல் தொடரை அடுத்து 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. முன்பு டி20 அணியில் நிரந்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் இருந்த நிலையில் இந்திய அணியில் தனது இடத்தை மீண்டும் கைப்பற்ற அவருக்கு ஐபிஎல் தொடர் வாய்ப்பாக அமையும்.
2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறனை இந்திய அணியின் தேர்வுக் குழு கூர்ந்து கண்காணிக்கும் என கூறப்படுகிறது. அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நேரடியாக இந்திய டி20 அணியில் அவர் தேர்வு செய்யப்படுவார். அதே சமயம், விக்கெட் கீப்பிங் அல்லது பேட்டிங் என ஏதோ ஒரு செயல்பாட்டில் அவரால் சரியாக செயல்பட முடியவில்லை என்றால் அவர் ஐபிஎல் தொடருக்கு பின் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னை நிரூபித்த பின்னரே இந்திய அணியில் இடம் பெற முடியும்.
மற்றொரு இந்திய வீரரான முகமது ஷமி குறித்தும் பிசிசிஐ அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. அதில் அவரது வலது கால் பாதத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும், அவரை பிசிசிஐ மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும், அதனால் அவர் 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ கூறி உள்ளது.
அதே போல வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கும் தொடையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருப்பதால் அவரும் 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்து இருக்கிறது.