மும்பை : ஐபிஎல் தொடரில் இந்திய விக்கெட் கீப்பர்களான சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஜித்தேஷ் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய 5 பேரும் சிறப்பாக செயல்பட்டு வருவது தேர்வு குழுவுக்கு தலைவலியை கொடுத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும், இந்திய வீரர்களின் கவனம் டி20 உலகக்கோப்பை தொடரில் தான் உள்ளது. ஜூன் மாதம் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி மே முதல் வாரத்தில் அறிவிக்கப்படவுள்ளது. அதன்பின் மே 25ஆம் தேதி இறுதிக்கட்ட அணியின் பட்டியல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய தேர்வு குழுவின் உத்தேச பட்டியலில் விளையாடும் வீரர்களின் ஆட்டத்தை நேரடியாக பிசிசிஐ குழு கண்காணித்து வருகிறது. களத்தில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியில் பயிற்சியிலும் அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிசிசிஐ தேர்வு குழுவிற்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான விக்கெட் கீப்பர் ரேஸில் ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஜித்தேஷ் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய 5 பேரும் உள்ளனர். இதில் கேஎல் ராகுல் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் ஒருமுறை கூட விளையாடவில்லை. இருப்பினும் லக்னோ அணிக்காக விக்கெட் கீப்பராக செயல்பட்டு கவனம் ஈர்த்து வருகிறார்.
இன்னொரு பக்கம் ரேஸில் முன்னணியில் உள்ள ஜித்தேஷ் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால் பேக் அப் விக்கெட் கீப்பரை தயார் செய்ய ஆர்வம் காட்டப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் பரிசீலிக்கப்படுவார்கள் என்று பார்க்கப்பட்ட நிலையில், அவுட் ஆஃப் சிலபஸாக ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 194 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். மறுபக்கம் இஷான் கிஷன் 5 போட்டிகளில் விளையாடி 161 ரன்களையும், சஞ்சு சாம்சன் 5 போட்டிகளில் விளையாடி 246 ரன்களை குவித்துள்ளனர். இவர்கள் மூவரும் டாப் 4 பேட்டிங் வரிசையில் விளையாடி வருவதால், ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.
அண்மையில் இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டிருந்ததால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரிஷப் பண்ட்-ன் செயல்பாடுகள் மிரட்டலாக அமைந்துள்ளதோடு, அழுத்தத்தை எதிர்கொள்வதில் சிறந்த வீரர் என்பதால் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.