முல்லான்பூர் : 2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக பங்கேற்றார். 16 மாத நீண்ட இடைவெளிக்கு கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் பங்கேற்ற ரிஷப் பண்ட், இந்தப் போட்டியில் எப்படி ஆடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நான்காம் வரிசையில் பேட்டிங் இறங்கினார் ரிஷப் பண்ட். அவர் 13 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் பேட்டிங் ஆடிய பண்ட், இத்தனை ரன்கள் எடுத்ததே அவர் நல்ல ஃபார்மில் இருப்பதற்கான அடையாளமாக இருந்தது.

ஆனாலும், ரிஷப் பண்ட் தான் விரைவாக அவுட் ஆனதை எண்ணி கடும் கோபத்தில் இருந்தார். ஆடுகளத்தை விட்டு வெளியேறும் போது பேட்டால் தனது கால்களில் லேசாக அடித்துக் கொண்டார். பின்னர் அணியின் அறைக்கு சென்ற அவர் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அருகே அமர்ந்தார்.
அப்போதும் கோபத்தை அடக்க முடியாத அவர் ரிக்கி பாண்டிங் முன்பு இருந்த இருக்கையை குத்த முயற்சி செய்து பின் தன்னை தானே அடக்கிக் கொண்டார். ரிஷப் பண்ட் செயலைப் பார்த்து ஒரு வினாடி அதிர்ந்த ரிக்கி பாண்டிங், அவர் அவுட் ஆன விரக்தியில் இருப்பதை புரிந்து கொண்டு அவரை தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தார்.
இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்த போதும், பஞ்சாப் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இஷாந்த் சர்மா பாதி போட்டியில் காயம் காரணமாக வெளியேறியதால் பந்துவீச்சில் சரியான பந்துவீச்சாளர் இல்லாமல் டெல்லி அணி தோல்வி அடைந்தது.
கேப்டனாக ரிஷப் பண்ட் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியை தோல்வியுடன் தொடங்கி இருக்கிறார். ரிஷப் பண்ட் தனது விரக்தி மனநிலையை சரி செய்து கொண்டால் மட்டுமே நீண்ட ஐபிஎல் தொடரில் அணியை சரியாக வழிநடத்த முடியும். இல்லையெனில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் பாதிக்கப்படும்.