சென்னை : கேகேஆர் அணி கோப்பை வென்ற சில நிமிடங்களிலேயே நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கிற்கு இளம் வீரர் ரிஷப் பண்ட் வீடியோ கால் செய்து வாழ்த்து கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஐபிஎல் பைனலில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் ஐதராபாத் அணி நிர்ணயித்த 114 ரன்கள் இலக்கை கேகேஆர் அணி 10.3 ஓவர்களில் சேஸிங் செய்து சாதனை படைத்தது. இதன் மூலமாக 3வது முறையாக கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

கேகேஆர் அணியின் சேஸிங் 72 நிமிடங்களில் முடிவடைந்த நிலையில், விருது வழங்கும் விழாவிற்கு சுமார் 90 நிமிடங்கள் வரை தாமதமானது. இதனால் கேகேஆர் அணி வீரர்கள் அனைவரும் தொடர்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக நட்சத்திர வீரர் ரிங்கு சிங், கேகேஆர் அணியின் ஒவ்வொரு வீரருடனும் கொண்டாடி கொண்டிருந்தார்.
கவுதம் கம்பீர் காலில் விழுந்து நன்றி கூறி கொண்டாடிய ரிங்கு சிங், அதன்பின் பயிற்சியாளர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்தார். அதேபோல் சீனியர் வீரர்களுக்கு வாழ்த்து கூறிய ரிங்கு சிங்கின் கொண்டாட்டங்கள் சோசியல் மீடியாவிலும் ட்ரெண்டாகின. சில நாட்களுக்கு முன், சீனியர் கிரிக்கெட்டில் இதுவரை எந்த கோப்பையையும் வெல்லவில்லை. அதற்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக முதல்முறையாக ரிங்கு சிங் கோப்பையை வென்றுள்ளார். இதனால் ரிங்கு சிங்கின் கொண்டாட்டம் வேற லெவலில் இருந்தது. இந்த நிலையில் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற சில நிமிடங்களில், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் உடனடியாக ரிங்கு சிங்கிற்கு வீடியோ காலில் அழைத்து வாழ்த்து கூறினார்.
ரிங்கு சிங் - ரிஷப் பண்ட் இருவரும் பெரியளவில் இணைந்து விளையாடாத சூழலில், இருவரும் நட்புடன் இருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீடியோ காலில் ரிஷப் பண்டிடம், மே 28ஆம் தேதி (இன்று) அமெரிக்காவுக்கு புறப்படுவதாக ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.