மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் மூத்த வீரர்கள் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனவும், அவரை குழப்பும் வகையில் நடந்து கொள்கிறார்கள், சுதந்திரமாக செயல்பட விடவில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் அம்பதி ராயுடு புகார் கூறி இருக்கின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா பதவி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்தில் ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடர் தொடங்கி விட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கிறது. ஹர்திக் பாண்டியா கேப்டன்சி சரியில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ள அதே வேளையில் மும்பை அணிக்குள் நடக்கும் பனிப் போர் குறித்தும், ஹர்திக் பாண்டியா எந்த மனநிலையில் இருக்கிறார் என்பது குறித்தும் ஹர்பஜன் சிங் மற்றும் அம்பத்தி ராயுடு கூறி உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் அறையை பார்க்கும் போதே ஹர்திக் பாண்டியா தனித்து விடப்பட்டு இருப்பது தெரிவதாக ஹர்பஜன் சிங் கூறி இருக்கிறார். "மும்பை இந்தியன்ஸ் அறையின் காட்சிகள் நன்றாக இல்லை. ஹர்திக் பாண்டியா தனித்து விடப்பட்டு இருக்கிறார். அந்த அணியின் வீரர்கள் அவரை கேப்டனாக ஏற்க வேண்டும், அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். அந்த அணிக்காக நான் ஆடியவன் என்ற முறையில் சொல்கிறேன். அங்கே நடப்பது நன்றாக இல்லை" என்றார் ஹர்பஜன் சிங்.
அம்பத்தி ராயுடு ஒரு படி மேலே போய் ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் பாண்டியாவை குழப்ப முயற்சி செய்கிறார்கள் என குற்றம் சுமத்தி இருக்கிறார். அவர் பேசுகையில், "இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தற்செயலானதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவரை குழப்பும் வகையில் அணியில் நிறைய பேர் உள்ளனர். டிரஸ்ஸிங் ரூமில் உள்ள பெரிய வீரர்கள் அவரை கேப்டனாக சுதந்திரமாக பணியாற்ற அனுமதிப்பதில்லை. எந்த கேப்டனுக்கும் இது நல்ல சூழ்நிலை இல்லை" என்றார்.
நவ்ஜோத் சிங் சித்து கூறுகையில், "ஹர்திக் யாருடனும் பேச முடியாததால் மனமுடைந்து சோகமாக இருக்கிறார். அனைவரும் ஒன்றிணைந்து விளையாடும்போதுதான் அணி வெற்றிபெற முடியும் என்பதை மற்ற வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை செய்யாவிட்டால் மும்பை வெற்றி பெறாது. மும்பை அறையில் இருக்கும் ஹர்திக்கின் படங்கள் ஒரு சோகமான கதையைச் சொல்கிறது" என்றார்.