மும்பை : சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்டோருக்கு ஈகோவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பது தெரியும் என முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரின் போது மும்பை அணி நிர்வாகம் நட்சத்திர வீரர்களை அணியில் வாங்கி வெற்றிகளை பெறும் என்று குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார். இதனால் மும்பை அணி ரசிகர்கள் பலரும் அவரை காட்டமாக விமர்சித்தனர். ஆனால் ஐபிஎல் தொடர் முடிவடைந்த சில மாதங்களிலேயே, டிரேடிங் முறையில் ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டு வந்தது மும்பை அணி.

அதுமட்டுமல்லாமல் டிரேடிங் தேதி முடிவடைந்த பின் ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது. மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டனான ரோகித் சர்மாவையே நீக்கியது அந்த அணி ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேபோல் மும்பை அணியின் ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் உள்ளிட்டோர் மறைமுகமாக எதிர்த்தனர்.
ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா இன்ஸ்டாகிராமில் நேரடியாகவே சில விமர்சனங்களை முன் வைத்தார். இதனால் மும்பை அணியில் உள்ள வீரர்களுக்கு இடையே ஈகோ யுத்தம் எழுந்துள்ளது வெளிப்படையாக தெரிந்தது. இதனால் ஐபிஎல் தொடரின் போது மும்பை அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் பேசுகையில், கேப்டன்சி மாற்றத்தை சமாளிப்பதே சவால் நிறைந்த ஒன்றாகும். ஏனென்றால் மும்பை அணியின் மொத்த திட்டங்களும் மாற்றம் பெறும். ஆனால் மும்பை அணி நிர்வாகம் கடந்த மாதமே பயிற்சி முகாமை தொடங்கிவிட்டது. ஐபிஎல் போட்டிகளுக்கு இளம் வீரர்களை தயார்ப்படுத்த தொடங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை மும்பை அணி வீரர்களுக்கு இடையில் ஏதேனும் பிரச்சனை இருப்பது தெரிந்தால், அதனை முதல் போட்டிக்கு முன்பாகவே சரி செய்துவிடுவார்கள்.
மும்பை அணியில் முக்கிய முடிவை எடுக்கும் நிலையில் மூத்த நிர்வாகிகள் இருந்தார்கள். அவர்களுக்கு வேறு பணிகள் அளிக்கப்பட்டதால், தற்போது பயிற்சியாளர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நான் கேட்கும், நினைக்கும் சம்பவங்கள் எதையும் நிச்சயம் பார்க்க முடியாது. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடியவர்களுக்கு ஈகோவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரியும். அதனால் மும்பை அணியை பற்ரி கவலை கொள்ள தேவையில்லை என்று கூறியுள்ளார்.