மும்பை : அடுத்த ஆறு நாட்களில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறி இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதை ரசிக்கவில்லை. மேலும், ஹர்திக் பாண்டியா அவரது பதவியை பறித்து விட்டதாக வெளியான தகவல்களால் கடும் கோபத்தில் உள்ளனர். மறுபுறம் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

இந்த தோல்விகளாலும். ரசிகர்களின் எதிர்ப்பாலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா அழுத்தத்தை சந்தித்து துவண்டு போய் இருக்கிறார் என மனோஜ் திவாரி கூறினார். ஏப்ரல் 1 அன்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் ஆறு நாட்கள் கழித்து தான் மும்பை அணி தனது அடுத்த போட்டியில் ஆட உள்ளது.
அந்தப் போட்டிக்கு முன்னதாக ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மனோஜ் திவாரி கூறினார். ஐபிஎல் அணிகள் உரிமையாளர்களால் நடத்தப்படுவது, அவர்கள் பாதி தொடரில் கேப்டனை மாற்றுவது பற்றி எல்லாம் யோசிக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது பற்றி மனோஜ் திவாரி பேசுகையில், "ஹர்திக் பாண்டியா அழுத்தத்தில் இருக்கிறார் என்பது சில விஷயங்களை நமக்கு சொல்கிறது. அவர் ரசிகர்களின் எதிர்ப்பால் அழுத்தத்தை உணர்கிறார். நான் பெரிய விஷயம் ஒன்றை சொல்லப் போகிறேன். இந்த ஆறு நாள் இடைவெளியில் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து கேப்டன்சியை பறித்து ரோஹித் சர்மாவை கேப்டனாக்க வாய்ப்பு உள்ளது." என்றார்.
மேலும், "இந்த மாற்றம் நடக்க வாய்ப்புள்ளது. இந்த ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் குறித்து எனக்கு தெரிந்த வரை அவர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்க தயங்க மாட்டார்கள். அவர்கள் தான் ரோஹித் சர்மா கேப்டன் பதவியை பறித்து இந்த சிக்கலை துவங்கி வைத்தார்கள். உங்களுக்கு ஐந்து கோப்பை வென்று கொடுத்த கேப்டனை மாற்றினீர்கள். தற்போது புதிய கேப்டன் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றுத் தரவில்லை. அவரது கேப்டன்சியும் சரியில்லை. நிறைய தவறுகள் நடக்கின்றன" என்றார் மனோஜ் திவாரி.