மும்பை : ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க கடந்த ஒரு வருடமாக திட்டம் போட்டு அதை செயல்படுத்தி இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
2011ஆம் ஆண்டு தான் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தார். அதன் பின் 2013இல் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின் அந்த ஆண்டே அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தார். இதுவரை மொத்தமாக ஐந்து முறை கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பை வென்று கொடுத்து இருக்கிறார்.
கடைசியாக 2020இல் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பை வென்று இருந்தது. அதன் பின் அந்த அணி ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. அந்த அதிருப்தி மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துக்கு இருந்தது. அது மட்டுமின்றி ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட பேட்டிங் குறித்தும் சில கருத்துக்கள் இருந்தன.

கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 19.14 மற்றும் 20.75 மட்டுமே. இதே காலகட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 120 மற்றும் 132 மட்டுமே. அதனால், அணியின் பின்னடைவுக்கு துவக்க வீரராக இறங்கும் ரோஹித் சர்மாவும் ஒரு காரணம் என மும்பை இந்தியன்ஸ் அணி கருதியது.
ஆனால், ரோஹித் சர்மாவை நீக்க வேண்டும் என்றால் கேப்டனாக சரியான ஒரு நபரை நியமிக்க வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அணியின் கேப்டனாக ஒருவர் செயல்பட வேண்டும் என்பதை மனதில் வைத்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த தங்களின் வளர்ப்பு வீரரான ஹர்திக் பாண்டியாவை குறி வைத்தது மும்பை அணி நிர்வாகம்.
பாண்டியாவும் அணி மாற ஒப்புக் கொள்ள, சாத்தியமே இல்லாத ஒரு விஷயத்தை சாத்தியப்படுத்தி, குஜராத் அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த கேப்டனை தட்டிப் பறித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதற்கு ஒரு வருடமாக பல பேச்சுவார்த்தைகள் பின்னணியில் நடந்ததாக கூறப்படுகிறது.
ஒரு வருடமாக திட்டம் போட்டு இறுதியில் பாண்டியா மும்பை அணிக்கு வந்தார். அவர் வந்த போதே கேப்டன் பதவி அவருக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டது. அதே போல, அதிரடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் பாண்டியா. ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டு இருக்கிறார். இனி அவர் படிப்படியாக மும்பை அணியில் ஆடும் வாய்ப்பையும் இழக்க நேரிடலாம்.
ரோஹித் சர்மா கடந்த 11 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். ஐந்து முறை அந்த அணிக்கு கோப்பை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஐந்து ஐபிஎல் கோப்பைகள் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையையும் பெற்று இருக்கிறார் ரோஹித் சர்மா. தற்போது அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.