மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டிய நியமிக்கப்பட்டதை விரும்பாத ரோஹித் சர்மா ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஐபிஎல் தொடர் தொடங்கி உள்ள நிலையில் போட்டிகளின் போதும் அவரை கேலியும், கிண்டலும் செய்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.
ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியா பறித்து விட்டதாக அவர்கள் எண்ணியே இப்படி செய்து வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது.

இந்தப் போட்டிகளில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியாவுடன் இயல்பாக பேசும் காட்சிகளை கண்ட பின்னரும் அவரது ரசிகர்களின் கோபம் குறையவில்லை. ஹர்திக் பாண்டியா பவுண்டரி எல்லை அருகில் வரும் போதெல்லாம் "ரோஹித், ரோஹித்" என கோஷம் எழுப்பி வருகின்றனர்.
அத்துடன் நிற்காமல் தற்போது ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை குறி வைத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசமான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் சில பதிவுகள் மோசமான வார்த்தைகளை கொண்டு தனிநபர் தாக்குதலாக இருக்கிறது. இதை அடுத்து பலரும் அது போல் மோசமான பதிவுகளை வெளியிட்டு வருபவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பதவி ஏற்றதால் இதுவரை எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் அனுபவிக்காத மிக மோசமான எதிர்ப்பை சந்தித்து வருகிறார் ஹர்திக் பாண்டியா. ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை தாண்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்குள்ளேயே அவர் எதிர்ப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா இதுவரை இது குறித்து வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. இனி மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து சில போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பாண்டியா இந்த எதிர்ப்பை ஓரளவு சமாளிக்க முடியும். மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்க உள்ளது. அந்தப் போட்டியில் வென்றால் ஹர்திக் பாண்டியா ஓரளவு அழுத்தத்தில் இருந்து தப்பலாம்.