மும்பை : ஹர்திக் பாண்டியாவை நம்பி, ரோஹித் சர்மாவை கழட்டி விட்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பதே சந்தேகம் தான் என என்டிடிவி உள்ளிட்ட பல ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
எனவே, வேறு வழியின்றி மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மாவை 2024 ஐபிஎல் தொடரில் கேப்டனாக நியமிக்கும் என அந்த அணியின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர். ஆனால், ரோஹித் சர்மா மீண்டும் கேப்டன் பதவியை அளித்தால் ஒப்புக் கொள்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் ரோஹித் சர்மா கேப்டன்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து ஐபிஎல் கோப்பைகள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைகள் வென்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக மும்பை அணியால் கோப்பை வெல்ல முடியவில்லை. எனினும், கடந்த 2023 ஐபிஎல் தொடரில் அந்த அணி பிளே - ஆஃப் வரை சென்று இருந்தது.
ஆனாலும், ரோஹித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகும் நிலையில், அணியின் எதிர்கால கேப்டனை கண்டறிய முடிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 2023 உலகக்கோப்பைக்கு முன் ஹர்திக் பாண்டியா தான் அதற்கு சரியான நபர் என்ற முடிவுக்கு வந்தது. அப்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணி தான் தன்னை வளர்த்தது என்பதை மறவாத பாண்டியா, மும்பை அணிக்கு தாவ சம்மதம் தெரிவித்தார்.
அணி மாறிய உடன் பாண்டியாவை கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்ததை ரோஹித் சர்மா ரசிகர்கள் விரும்பவில்லை. ரோஹித் சர்மாவும் தன்னை பதவி நீக்கம் செய்ததை விரும்பவில்லை என்றே தெரிகிறது. அவர் இதுவரை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதை வைத்தே அவர் அதிருப்தியில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் அணி மாறக் கூட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், கணுக்கால் காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பாண்டியா ஆட முடியாமல் போனால் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ரோஹித் சர்மாவையே கேப்டனாக நியமிக்கவே திட்டமிடும். ஆனால், இவ்வளவு நடந்த பின் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டன் ஆக ஒப்புக் கொள்வாரா? என்பதே முக்கியமான கேள்வி.