மும்பை : 2024 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரிய விரிசல் இருப்பதாக கூறப்பட்டது. கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, புதிய கேப்டன் ஹர்திக் எடுக்கும் முடிவுகளுக்கு உடன்படவில்லை எனவும், அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணி முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. அதன் பின் நான்காவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இந்த ஆண்டில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் அணிக்குள் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என விமர்சகர்கள் கூறினர்.

ஹர்திக் பாண்டியாவை எதிர்த்து கோஷமிட்டு வந்த ரசிகர்களும் கூட மும்பை அணியின் கேப்டனாக அவரின் முதல் வெற்றிக்கு பின் அடங்கி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் ரோஹித் சர்மா இன்னும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் கோபத்தில் இருப்பதாக ரசிகர்கள் அவரின் ட்விட்டர் பதிவை சுட்டிக் காட்டி கூறி வருகின்றனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ட்விட்டரில் வெற்றி குறித்து பதிவிட்டனர். அதில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், அவரை கேப்டனாக ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படும் இஷான் கிஷனும் தங்கள் பதிவுகளில் ரோஹித் சர்மாவின் புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டு இருந்தனர்.
ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதை விரும்பாதவர்களாக அறியப்படும் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் தங்கள் பதிவுகளில் ஹர்திக் பாண்டியாவின் புகைப்படம் இல்லாதவாறு மற்ற வீரர்களின் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தனர். அதனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் பிளவு இன்னும் சரியாகவில்லை என்ற பேச்சு கிளம்பி உள்ளது. ஹர்திக் பாண்டியா - ரோஹித் சர்மா ரசிகர்கள் இந்த பதிவுகளை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஹர்திக் பாண்டியா மனதில் எந்த பிரிவினை எண்ணமும் இல்லை. ஆனால், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் போன்றோர் தான் அணியை பிரிக்க நினைக்கிறார்கள் என ஹர்திக் பாண்டியா ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆக மொத்தத்தில் "ஒரே குடும்பம்" என தங்களை தாங்களே சொல்லிக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி பங்காளி சண்டையில் சிக்கித் தவிப்பது தெளிவாக தெரிகிறது.