மும்பை : 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ஒன்று கூடும் நிகழ்வு ஒன்றிற்கு அந்த அணி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் பெரும்பாலான வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் ரோஹித் சர்மா அதில் இடம் பெறவில்லை.
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் அந்த அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, முக்கிய வீரர்கள் பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்றோருக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. அதனால், அவர்கள் மூவரும் 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்களா? அவருடன் இணக்கமாக நடந்து கொள்வார்களா? என்ற கேள்வி இருந்தது.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ஒருவருடன் ஒருவர் இயல்பாக பழக வேண்டி அலிபாக் கடற்கரை நகரத்துக்கு சென்றுள்ளனர். அங்கே இரண்டு நாட்கள் கழித்த பின்னர் தங்கள் அணியின் முதல் ஐபிஎல் லீக் போட்டியில் பங்கேற்க அகமதாபாத் செல்ல உள்ளனர்.
இந்த குழுவில் மும்பையில் பயிற்சி செய்து கொண்டிருக்கும் திலக் வர்மா, டேவாலட் ப்ரீவிஸ் ஆகிய இருவரை தவிர்த்து ஹர்திக் பாண்டியா உட்பட பிற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இடம் பெற்ற நிலையில் ரோஹித் சர்மா மற்றும் பும்ரா இடம் பெறவில்லை. பும்ரா அணியின் பயிற்சி முகாமுக்கே வரவில்லை. அவர் நேரடியாக முதல் போட்டிக்கு முன் அகமதாபாத் வந்து விடுவதாக கூறி இருக்கிறார்.
ஆனால், மும்பையில் நடந்த பயிற்சி முகாமுக்கு வந்த ரோஹித் சர்மா, அலிபாக் சென்ற வீரர்கள் குழுவில் இடம் பெறவில்லை. இதன் மூலம் ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அதிகம் ஒட்டவில்லை, விலகியே இருக்கிறார் என கூறப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான முதல் லீக் போட்டியில் நடக்கும் சம்பவங்களை வைத்தே மும்பை இந்தியன்ஸ் அணியில் என்ன நடக்கிறது என்பது வெளி உலகுக்கு தெரிய வரும்.