மும்பை : யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹர்திக் பாண்டியாவை இந்திய டி20 அணியில் இருந்தே நீக்கலாமா? என தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் - இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா முக்கிய வீரராக இருக்க காரணமே அவர் அதிரடி பேட்டிங் செய்யும் வேகப் பந்துவீச்சாளர் என்பது தான். ஆல் - ரவுண்டர் என்ற அடையாளத்தின் காரணமாகவே ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார். ஆனால், அவர் 2024 ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் படுமோசமாக செயல்பட்டு வருகிறார்.

இதுவரை நடந்த ஆறு போட்டிகளில் அவர் நான்கு போட்டிகளில் மட்டுமே பந்து வீசி இருக்கிறார். இதுவே ஒரு சிக்கலாக உள்ளது. ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம் பெற்றால் அனைத்து போட்டிகளிலும் நான்கு ஓவர்களும் வீசும் அளவுக்கு திறன் பெற்று இருக்க வேண்டும். ஆனால், பாண்டியா காலில் உள்ள வலியின் காரணமாகவே இரண்டு போட்டிகளில் பந்து வீசவில்லை என கூறப்படுகிறது.
அடுத்து பந்துவீச்சில் விக்கெட் வீழ்த்த வேண்டும் அல்லது ரன்களை குறைவாக விட்டுக் கொடுக்க வேண்டும். இந்த ஐபிஎல் தொடரில் அந்த இரண்டிலும் படுமோசமாக செயல்பட்டு இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. இதுவரை நான்கு போட்டிகளில் பந்து வீசி உள்ள பாண்டியா ஒரு ஓவருக்கு சராசரியாக 12 ரன்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறார். 11 ஓவர்கள் பந்து வீசி மூன்று விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
மேலும், பேட்டிங்கிலும் பாண்டியா சரியாக செயல்படவில்லை. ஆறு போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் இரண்டு முறை சேஸிங்கில் பந்துகளை வீணடித்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அணியின் வெற்றி வாய்ப்பு கெடுத்துள்ளார்.
2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா அனைத்து போட்டிகளிலும் பந்து வீசவில்லை. பந்து வீசிய நான்கு போட்டிகளிலும் மோசமான செயல்பாட்டைக் கொண்டு இருக்கிறார். மேலும், அவருக்கு காலில் காயம் முழுமையாக குணமடைந்து விட்டதா? என்பதிலும் சந்தேகம் உள்ளது. இந்த காரணங்களால் ஹர்திக் பாண்டியாவை 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு அழைத்து செல்ல வேண்டுமா? என்ற விவாதத்தில் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மற்றொரு வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான சிவம் துபே பேட்டிங்கில் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். மிடில் ஓவர்களில் இந்தியாவிலேயே அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்கும் ஒரே வீரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். ஆனால், அவரை சிஎஸ்கே அணி வேகப் பந்துவீச்சாளராக பயன்படுத்தவில்லை என்பது மட்டுமே அவருக்கு உள்ள பெரிய பலவீனமாக உள்ளது. எனவே, அடுத்த இரண்டு வாரத்தில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாட்டை பொறுத்தே அவரை இந்திய டி20 அணியில் சேர்ப்பதா? இல்லையா? என்ற முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.