ஜெய்ப்பூர் : 2024 ஐபிஎல் ஏலத்துக்கு முன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கானை தங்கள் அணியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அணி மாற்றம் செய்தது. அதற்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கலை தங்கள் அணிக்கு மாற்றிக் கொண்டது.
அப்போதே ஆவேஷ் கானை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தங்கள் அணியை விட்டு அனுப்பியது தவறு என்ற விமர்சனம் எழுந்தது. அதே சமயம், யாரும் அதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது என்ற நினைத்தது லக்னோ அணி. ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடிய ஆவேஷ் கான் தனது மதிப்பு என்ன என்பதை காட்டி விட்டார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளராக இடம் பெற்ற ஆவேஷ் கான் இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் கடைசி ஓவரை வீசினார். அதுவும் எதிரணி சேஸிங் செய்த போது கடைசி ஓவரை வீசினார். அந்த இரண்டு கடைசி ஓவர்களிலும் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை.
இதில் தன்னை அணியை விட்டு அனுப்பிய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 27 ரன்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார் ஆவேஷ் கான். அப்போது நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா களத்தில் இருந்தனர். அவர்களால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.
அடுத்து கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஆடி வந்தது. அப்போது கடைசி ஓவரை வீசிய ஆவேஷ் கான் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதை அடுத்து ஆவேஷ் கான் கவனம் பெற்றுள்ளார். இனி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் எந்த அணி ஆடினாலும் ஆவேஷ் கான் குறித்து கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவர் ஏற்படுத்தி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் செய்தது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.