ஜெய்ப்பூர் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் விளாசிய இளம் வீரர் ரியான் பராக், எமோஷனலாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி மரண மாஸ் கம்பேக்கை நிகழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் ராஜஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் வெறும் 57 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. ஆனால் அடுத்த 10 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 128 ரன்களை குவித்துள்ளது. இதனால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்களை சேர்த்துள்ளது.

இதற்கு ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் தான் முக்கிய காரணம். இவர் முதல் 26 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில், அடுத்த 19 பந்துகளில் 58 ரன்களை விளாசி அசத்தினார். அதிலும் நார்கியே வீசிய கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்களை ரியான் பராக் விளாசி மிரட்டினார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக், அந்த அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கை காப்பாற்றியுள்ளார்.
கடந்த சில சீசன்களாக டவுன் ஆர்டரில் பேட்டிங் செய்து வந்த ரியான் பராக், இம்முறை நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கினார். இந்த சீசனில் ரியான் பராக்கின் ரோல் இதுதான் என்று முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் அணி நிர்ணயித்து அவரை களமிறக்கியது. இந்த நிலையில் பயிற்சியாளர் சங்கக்காரா வைத்த நம்பிக்கையை 2வது போட்டியிலேயே ரியான் பராக் காப்பாற்றி அசத்தியுள்ளார்.
இந்த இன்னிங்ஸ் குறித்து ரியான் பராக் பேசுகையில், நான் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அதேபோல் நார்கியே போன்ற அதீத வேகத்தில் வீசும் பவுலர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இதனால் கடைசி ஓவரில் பேட்டிங் செய்த போது இரு திசைகளிலும் ஷாட்களை அடிக்க தயாராக இருந்தேன். என்னிடம் வலிமை இருப்பது தெரியும். அது சரியான நேரத்தில் வெளிப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது.
எங்கள் கேப்டன் சஞ்சு சாம்சன் கடைசி வரை நின்று ஆட்டத்தை கொண்டு செல் என்று அறிவுறுத்தினார். என்னால் அதிக ரன்களை விளாச முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தது. இந்த பிட்சில் புதிதாக ஒரு பேட்ஸ்மேன் வந்து ரன்கள் சேர்ப்பது எளிதல்ல. கடைசி வரை ஒரு பேட்ஸ்மேன் களத்தில் நின்றால் மட்டுமே ரன்கள் சேர்க்க முடியும். இந்த இன்னிங்ஸால் கொஞ்சம் எமோஷனலாக உள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக கடினமான உழைத்ததற்கான பலன் கிடைக்க தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.