ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரர் பிரித்வி ஷாவை பிளேயிங் லெவனில் டெல்லி அணி சேர்க்காதது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ரிஷப் பண்ட் மீண்டும் கம்பேக் கொடுத்த போதும், டெல்லி அணி இன்னும் முழு பலத்தை எட்டவில்லை. அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி தொடக்க வீரர் பிரித்வி ஷா பிளேயிங் லெவன் மற்றும் இம்பேக்ட் பிளேயர் பட்டியலிலும் சேர்க்கப்படவில்லை.

இதனால் ரசிகர்கள் பலரும் பிரித்வி ஷா குறித்து கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் டெல்லி அணி தரப்பில் காயம் காரணமாக இஷான் சர்மா மற்றும் ஷாய் ஹோப் இருவரும் நீக்கப்பட்டு, நார்கியே மற்றும் முகேஷ் குமார் சேர்க்கப்பட்டனர்.
இந்த போட்டியிலும் பிளேயிங் லெவன் மற்றும் இம்பேக்ட் பிளேயர் பட்டியலிலும் பிரித்வி ஷா சேர்க்கப்படவில்லை. டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - மிட்சல் மார்ஷ் கூட்டணி களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஃபார்மின்மை காரணமாகவே பிரித்வி ஷா டெல்லி அணியில் இருந்து ஓரங்கப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே பிரித்வி ஷா அடித்த நிலையில், மற்ற போட்டிகளில் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. இதன் காரணமாகவே பிரித்வி ஷாவிற்கு பதிலாக ரிக்கி பூய் மற்றும் சுமித் குமார் ஆகியோருக்கு டெல்லி அணி தரப்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மெகா ஏலத்தின் போது இந்தியாவின் அடுத்த சச்சின் என்று பார்க்கப்பட்ட பிரித்வி ஷாவை டெல்லி அணி தக்க வைத்த நிலையில், இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் பட்டியலில் கூட எடுக்காமல் பெஞ்ச் செய்துள்ளது. இதனால் அடுத்தடுத்த சீசன்களில் பிரித்வி ஷா வேறு அணிக்கு வாங்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.