ஜெய்ப்பூர் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ஓய்வறையில் முடிவெடுப்பதற்கு முன்பாகவே களமிறங்கிவிட்டதாக அஸ்வின் பரபர தகவலை வெளியிட்டுள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு ரியான் பராக் முக்கிய காரணமாக அமைந்தார். சிறப்பாக விளையாடிய ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்களை விளாசினார். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது திடீரென களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் குல்தீப் யாதவ் மற்றும் நார்கியே பந்துகளில் சிக்சர் அடித்து தரமான கம்பேக்கை கொடுத்தார். இதன் மூலம் டெல்லி அணி பக்கம் சென்ற ஆட்டம், அப்படியே ராஜஸ்தான் பக்கம் திரும்பியது. சிறப்பாக விளையாடிய அஸ்வின், 19 பந்துகளில் 3 சிக்ஸ் உட்பட 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அஸ்வின் கேமியோ ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்கக்காரா, அனாலிஸ்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் 9 ஓவர்களுக்குள் சில விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தப்பட்டால், களமிறங்க தயாராக இருக்குமாறு கூறி இருந்தார்கள்.
அதனால் முதல் போட்டியின் போதே நான் காலில் பேட் கட்டிக் கொண்டு தான் அமர்ந்திருந்தேன். ஆனால் கடைசி வரை களமிறங்கவில்லை. அதேபோல் இந்த போட்டியிலும் பேட் கட்டிக் கொண்டு பெவிலியனில் இருந்தேன். 2 விக்கெட்டுகள் பறிபோன பின், நான் களமிறங்க வாய்ப்பில்லை என்று நினைத்து உடற்பயிற்சியாளர் ராஜாமணியுடன் இணைந்து சத்தமாக இளையராஜா பாடலை பாடிக் கொண்டிருந்தேன்.
திடீரென பட்லரும் ஆட்டமிழந்த போது, யாரிடமும் கேட்காமல் நான் உடனடியாக களமிறங்கிவிட்டேன். மைதானத்தில் நடந்து பாதி தூரம் சென்ற போது தான் யோசித்தேன். அப்போது சங்கக்காரா, அனாலிஸ்ட் மற்றும் சஞ்சு சாம்சன் மூவரும் யாரை களமிறக்கலாம் என்று ஆலோசித்து கொண்டிருந்தார்கள். அப்போது தயங்கி நான் களமிறங்கவா என்று கேட்ட போது, என்னை அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.