ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற 186 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணி தரப்பில் தொடக்க வீரர்களான பட்லர் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களிலும், பட்லர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் ராஜஸ்தான் அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருந்ததால், ராஜஸ்தான் அணி தரப்பில் 5வது பேட்ஸ்மேனாக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்பட்டார். 4வது விக்கெட்டுக்கு ரியான் பராக் - அஸ்வின் கூட்டணி நிதானமாக விளையாடி ராஜஸ்தான் அணியை மீட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஸ்வின் வேறு திட்டத்துடன் களமிறங்கி இருந்தார்.
குல்தீப் யாதவ் ஓவரில் அபாரமாக டவுன் தி டிராக் இறங்கி வந்து சிக்ஸ் விளாசிய அஸ்வின், நார்கியே வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்சர்களை விளாசி அனைவரையும் வியக்க வைத்தார். டெல்லி ஸ்பின்னர்களிடம் சிக்கித் தவித்த ராஜஸ்தான் அணியை, கண்மூடி திறப்பதற்குள் அஸ்வின் மீட்டெடுத்தார். மறுபக்கம் ரியான் பராக்கும் பதற்றமில்லாமல் சில பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
4வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடிய அஸ்வின் 19 பந்துகளில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 14 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 90 ரன்களை எட்டிய நிலையில், ரியான் பராக்குடன் இளம் வீரர் துருவ் ஜுரெல் இணைந்தார். இதன்பின் ரியான் பராக் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார்.
கலீல் அஹ்மத் வீசிய ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி விளாசிய ரியான் பராக், முகேஷ் குமார் ஓவரிலும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசி 34 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். அதன்பின் துருவ் ஜுரெல்லும் சில பவுண்டரிகளை விளாச, ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து ஜுரெல் 20 ரன்களில் ஆட்டமிழக்க, 18 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்திருந்தது.
ஃபினிஷிங் செய்யும் பொறுப்பு ரியான் பராக் - ஹெட்மயர் கூட்டணியின் கைகளில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து முகேஷ் குமார் 19வது ஓவரில் 15 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரை வீச நார்கியே அழைக்கப்பட்டார். இந்த ஓவரில் ரியான் பராக் 4,4,6,4,6 என்று மொத்தமாக 25 ரன்களை விளாசினார். இதன் மூலமாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ரியான் பராக் 45 பந்துகளில் 6 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 84 ரன்களை விளாசி அசத்தினார்.