ஜெய்ப்பூர் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 68 ரன்கள் விளாசியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியின் போது சஞ்சு சாம்சன் பேசும் போது, நீண்ட காலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால், பயிற்சியாளர் சங்கக்காரா இம்முறை எனக்கு புதிய ரோல் கொடுத்துள்ளார். வழக்கமாக முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட முயற்சிப்பேன். இம்முறை நீண்ட இன்னிங்ஸ் விளையாடுவதற்கான பணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதற்கேற்ப சஞ்சு சாம்சன் வேறு லெவல் இன்னிங்ஸ்களை விளையாடி வருகிறார். லக்னோ அணிக்கு எதிரான முதல் போட்டியில் 52 பந்துகளில் 82 ரன்களை சேர்த்த சஞ்சு சாம்சன், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 42 பந்துகளில் 69 ரன்களை விளாசினார். தற்போது குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 52 ரன்கள் சேர்த்திருந்தது.
அந்த அழுத்தத்தை எளிதாக உள்வாங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 2 சிக்ஸ், 7 ஃபோர்ஸ் உட்பட 68 ரன்களை விளாசியுள்ளார். அதிலும் கேப்டனாக 50வது போட்டியில் களமிறங்கியுள்ள சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி அசத்தியுள்ளார். அதேபோல் ராஜஸ்தான் அணிக்காக அடிக்கும் 25வது அரைசதம் இதுவாகும்.
வழக்கமாக ஐபிஎல் தொடரின் போது சஞ்சு சாம்சன் மீது கன்சிஸ்டன்சி விமர்சனங்கள் அதிகம் எழும். ஆனால் இம்முறை கன்சிஸ்டன்சி-க்கு எடுத்துக்காட்டாக சஞ்சு சாம்சன் விளையாடி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் சஞ்சு சாம்சன் 2 முறை நாட் அவுட் உட்பட 246 ரன்களை விளாசி இருக்கிறார். இது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியின் கண் பார்வையில் உள்ள ஜித்தேஷ் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் இதுவரை பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் சஞ்சு சாம்சனுக்கு டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.