ஜெய்ப்பூர் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் குல்தீப் சென் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் பர்கர் நீக்கப்பட்டு இளம் வீரர் குல்தீப் சென் சேர்க்கப்பட்டார். 2022 சீசனில் ராஜஸ்தான் அணியின் முக்கியமான வீரராக குல்தீப் சென் இருந்தவர். அதன்பின் காயம் காரணமாக அவதிபட்டு வந்த அவர், இந்த சீசனில் முதல்முறையாக களமிறங்கினார்.

இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி ரியான் பராக் மற்றும் சஞ்சு சாம்சனின் அபார அரைசதம் காரணமாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி பவர் பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் சேர்த்திருந்தது.
அதேபோல் மழை வருவதற்கு வாய்ப்பு இருந்ததால், குஜராத் பேட்ஸ்மேன்கள் கூடுதல் அதிரடியாக விளையாட வேண்டிய தேவை இருந்தது. ஆனால் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், முன்னதாக ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்து ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். இந்த நிலையில் 9வது ஓவரை வீசுவதற்காக இளம் வீரர் குல்தீப் சென் அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் 2வது பந்திலேயே ஸ்வீப் அடிக்க முயன்று சாய் சுதர்சன் 35 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் மேத்யூ வேட் - சுப்மன் கில் கூட்டணி இணைந்தது. 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 76 ரன்களை சேர்த்திருந்தது. அப்போது மழை குறுக்கிட, சில நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மீண்டும் 11வது ஓவரை வீச குல்தீப் சென் வந்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே மேத்யூ வேட் இன்சைட் எட்ஜாகி போல்டானார். தொடர்ந்து அதிரடி வீரர் அபினவ் மனோகர் களமிறக்கப்பட்டார்.
அதே ஓவரின் 4வது பந்தை குல்தீப் சென் 144 கிமீ வேகத்தில் லேட் ஸ்விங் செய்து வீசினார். அதனை கணிக்க தவறிய அபினவ் மனோகர் பேட்டை வீச, அவரை ஏமாற்றி பந்து ஸ்டம்பை பறக்கவிட்டது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குஜராத் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்கள் சேர்த்து தடுமாறியது.