ஜெய்ப்பூர் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது அனுபவ வீரர் அஸ்வின், சக வீரரை தரக்குறையாக திட்டியது ஸ்டம்ப் மைக்கில் பதிவான ஆடியோ மூலம் தெரிய வந்துள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி நடப்பு சீசனில் முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த குஜராத் அணி, மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெறும் நிலை இருந்தது. ஆனால் ராகுல் டிவாட்டியா மற்றும் ரஷீத் கான் இருவரும் கடைசி நேரத்தில் ஆட்டத்தை மாற்றினர்.
இந்த போட்டியில் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 40 ரன்களை விட்டுக் கொடுத்தார். குறிப்பாக அஸ்வின் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 17 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதுவே குஜராத் அணியின் அதிரடிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் அஸ்வின் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.
அஸ்வின் 17வது ஓவரின் 2வது பந்தை வீசுவதற்கு முன்பாக சில ஃபீல்டிங் மாற்றங்களை செய்தார். அப்போது ஷார்ட் தேர்ட் மேன் திசையில் நின்றிருந்த ஃபீல்டரை பின்னால் செல்ல சொல்வதற்காக சஞ்சு சாம்சனிடம், "பின்னாடி போய் நிற்க சொல்லு.. அந்த சனியனை" என்று திட்டியுள்ளார். அதற்கு உடனடியாக சஞ்சு சாம்சன், "பின்னாடி நில்லுடா டேய்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் அணியில் அஸ்வின் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரை கடந்து வேறு எந்த வீரருக்கும் தமிழ் தெரியுமா என்பது இதுவரை அறியப்படவில்லை. வழக்கமாக சஞ்சு சாம்சன் மற்றும் அஸ்வின் இருவரும் களத்தில் தமிழிலேயே உரையாடுவார்கள். அது தற்போது எல்லை மீறி, சக வீரரை திட்டும் அளவிற்கு சென்றுள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.