ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் அடித்த சிக்சர், மைதானத்தில் இருந்த குழந்தை மீது அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்துள்ளது. சிறப்பாக விளையாடிய ரியான் பராக் 48 பந்துகளில் 5 சிக்ஸ், 3 ஃபோர்ஸ் உட்பட 76 ரன்களை விளாசினார்.

இந்த ஐபிஎல் தொடரில் ரியான் பராக் விளாசும் 3வது அரைசதம் இதுவாகும். இது மூலமாக 5 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரியான் பராக், 87 பேட்டிங் சராசரி மற்றும் 158.18 ஸ்ட்ரைக் ரேட்டில் 261 ரன்களை விளாசி இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 8 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானம் காக்க, ரியான் பராக் அட்டாக்கை தொடங்கினார். குறிப்பாக குஜராத் அணியின் நட்சத்திர ஸ்பின்னரான நூர் அஹ்மத்தை ரியான் பராக் வெளுத்து கட்டினார். இவர் வீசிய 9வது ஓவரிலேயே ஒரு சிக்ஸ் அடித்த அவர், 13வது ஓவரில் 2 சிக்சரை விளாசி தள்ளினார். அதில் அந்த ஓவரின் முதல் பந்தில் அடிக்கப்பட்ட சிக்சர், மிட் விக்கெட் திசையின் எல்லையில் சென்று விழுந்தது.
ரியான் பராக் அடித்த சிக்சர் பந்தை ரசிகர்கள் கேட்ச் பிடிக்க முயன்ற போது, அந்த பந்து மைதானத்தில் இருந்த குழந்தை மீது அடித்தது. பந்து அடித்ததன் காரணமாக குழந்தை அழத் தொடங்க, அருகில் இருந்த ரசிகர்கள் பரபரப்பாகினர். இதன் பின் மைதானத்தில் இருந்த மருத்துவ குழுவினர் சார்பாக குழந்தை சிகிச்சையளிக்கப்பட்டதாக வர்ணனையில் தெரிவிக்கப்பட்டது.
ஆர்சிபி அணிக்காக கிறிஸ் கெய்ல் விளையாடிய போது ஒருமுறை அவர் அடித்த மைதானத்தில் இருந்த குழந்தை மீது பட்டது. இதனால் காயமடைய, கிறிஸ் கெய்க் குழந்தையை நேரில் சந்தித்தார். தற்போது ஐபிஎல் தொடரில் அதிகப்படியான சிக்சர்கள் அடிக்கப்பட்டு வருவதால், குழந்தைகளை அழைத்து பெற்றோர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.