ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் வெற்றிபெற்றது குறித்து குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி விளையாடிய 4 போட்டிகளில் 4லும் வென்று புள்ளிப்பட்டியலில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சிதறடித்துள்ளது குஜராத். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.

பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து துவண்டு போயிருந்த குஜராத் அணி மீண்டு வந்து கம்பேக் கொடுத்துள்ளது. கடைசி 3 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஷாரூக் கான், ராகுல் டிவாட்டியா மற்றும் ரஷீத் கான் மூவரும் இணைந்து மிரட்டலான வெற்றியை குஜராத் அணிக்கு பெற்று கொடுத்துள்ளனர்.
இந்த வெற்றியின் மூலமாக குஜராத் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்த வெற்றிக்கு பின் குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், எங்களின் திட்டம் கடைசி 3 ஓவர்களில் 45 ரன்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான். ஏனென்றால் இதுபோன்ற சில நேரங்களில் எளிதாக வெற்றிபெற முடியும்.
கணக்கு போட்டு பார்த்தால், ஒரு பேட்ஸ்மேன் 9 பந்துகளுக்கு 22 ரன்கள் சேர்க்க வேண்டும். ஆனால் 2 அல்லது 3 பந்துகள் மீதமிருக்கும் போதே வெற்றிபெற முடியும். இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் எந்த மாற்றமும் இருக்காது. எப்போது வெற்றி என்பது மனநிலையை பொறுத்தது தான். நான் ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்பதை நோக்கியே விளையாடுகிறேன்.
இந்த ஆட்டத்தில் ராகுல் டிவாட்டியா மற்றும் ரஷீத் கான் ஃபினிஷ் செய்தது மகிழ்ச்சி. கடந்த போட்டியில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆட்டம் எங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடைசி பந்தில் வெற்றிபெற்றது அற்புதமாக உணர்வு. ரஷீத் கான் எப்போதுமே தரமான வீரர். அவரை போன்ற ஒருவர் எப்போதும் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.