கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை ராஜஸ்தான் அணி தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் சுனில் நரைன் அபார சதம் அடித்ததால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் அபாரமாக விளையாடி சதம் அடிக்க அந்த அணி கடைசி பந்தில் வெற்றியை உறுதி செய்தது.

இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கே கே ஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், இந்த தோல்வியை ஜீரணித்துக்கொள்ள மிகவும் கசப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பரபரப்பான போட்டியில் வீரர்களின் எமோஷன்கள் ரோலர் கோஸ்டர் போல் மாறியது.
இந்த நிலை ஏற்படும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. கிரிக்கெட் உண்மையிலே கணிக்க முடியாத விளையாட்டு தான். ரோமன் போவெல் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். என்ன நடந்தது என்று விவரிக்க மிகவும் கடினமாக இருக்கிறது. இந்தத் தோல்வியை ஏற்றுக்கொண்டு அடுத்த போட்டி குறித்து யோசித்துச் செல்ல வேண்டும் என நினைக்கின்றேன்.
நாங்கள் இந்த போட்டியில் சரியான முறையில் தான் பந்துவீசினோம். கொஞ்சம் தவறினால் கூட பேட்ஸ்மேன்கள் பந்தை கிரவுண்டுக்கு வெளியே அனுப்பி விடுகிறார்கள். இது போல் ஒரு தோல்வி தொடருக்கு ஆரம்பத்திலே நடந்திருக்கிறது. இதே தோல்வி கடைசி கட்டத்தில் நிகழ்ந்தால் நிச்சயம் ஏமாற்றமாக இருக்கும்.
தற்போது முன்பே நடந்து விட்டதால் எங்கள் அணியில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று ஆராய்ந்து மீண்டும் பலமாக வருவதற்கு உதவியாக இருக்கும். சுனில் நரேன் எங்கள் அணியின் சொத்தாக இருக்கிறார். அவர் பேட்டிங்கில் காட்டும் திறன் நிச்சயம் எங்கள் அணிக்கு சாதகமாக இருக்கிறது. பட்லர் அடிக்கும் விதத்தை பார்த்துவிட்டு வருண் சக்கரவத்திற்கு ஓவர் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.
ஆனால் அதையும் அவர் அடித்து நொறுக்கி விட்டார். இந்த தோல்வியை ஜீரணிக்க கொஞ்சம் நேரம் ஆகும் என நினைக்கின்றேன். தற்போது எதையும் பற்றி கவலைப்படாமல் ரிலாக்ஸ் ஆக இருந்து மீண்டும் உத்வேகத்துடன் விளையாட வேண்டும். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் எங்களுக்கு கடினமான போட்டி ஒன்று இருக்கிறது. அதற்கு தயாராக வேண்டும். நமது தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது தான் முக்கியம். இந்த தோல்வியிலிருந்து நாங்கள் மீண்டும் வருவோம் என்று நம்புகிறேன் என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.