மும்பை : நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்சி என்று மூன்றிலும் அசத்தி வருவதாக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.
11 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன், இந்த சீசனில் முதல் முறையாக 500 ரன்களுக்கு மேல் விளாசி இருக்கிறார். நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கி வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என்று அனைவரையும் வெளுத்து கட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியையும் நட்சத்திர அந்தஸ்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.

பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்சி என்று மூன்றிலும் சஞ்சு சாம்சன் திருப்தியளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். வழக்கமாக கன்சிஸ்டன்சியில் சொதப்பும் சஞ்சு சாம்சன், இம்முறை கன்சிஸ்டன்சியிலும் அசத்தியதால், அவருக்கு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் கேகேஆர் அணியின் ஆலோசகராக அசத்தி வரும் கவுதம் கம்பீர் பேசுகையில், நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்காக சிறந்த வெற்றிகளை அடையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதேபோல் சஞ்சு சாம்சனுக்கு சர்வதேச கிரிக்கெட் அனுபவமும் போதுமான அளவிற்கு உள்ளது.
அவர் ஒன்றும் அறிமுக வீரர் கிடையாது. அதேபோல் ஐபிஎல் தொடரிலும் சஞ்சு சாம்சன் வெற்றிகளை ருசித்துள்ளார். இதனால் இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்ல முயற்சிக்க வேண்டும். இதுபோன்ற உலகளவிலான தொடரில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்படும் போது, அனைவரும் குறித்து வைத்து கொள்வார்கள்.
இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சனின் பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்சி என மூன்றிலும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்த தவறையும் செய்யவில்லை. ராஜஸ்தான் அணியை வழிநடத்திய அனுபவம், டி20 உலகக்கோப்பையில் அவரின் பேட்டிங்கில் வெளிப்படும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.