ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார்.
2020 ஐபிஎல் தொடரில் இருந்து இப்போது வரை ஐபிஎல் போட்டிகளில் போட்டியின் முதல் ஓவரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ட்ரென்ட் போல்ட் இரண்டாவதாக இருக்கும் பந்துவீச்சாளரை விட மூன்று மடங்கு அதிக விக்கெட் வீழ்த்தி முன்னணியில் இருக்கிறார்.

ட்ரென்ட் போல்ட் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டி வரை போட்டியின் முதல் ஓவரில் 22 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அதே சமயம், இதே காலகட்டத்தில் ஐபிஎல் போட்டியின் முதல் ஓவரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 8 விக்கெட்களுடன் உள்ளனர்.
இதன் மூலம் புதிய பந்தில் அதிக விக்கெட் வீழ்த்தும் ஆற்றல் கொண்ட வீரராக ட்ரென்ட் போல்ட் தன்னை அழுத்தமாக நிரூபித்து இருக்கிறார். அவர் புதிய பந்தை ஸ்விங் செய்வதில் சர்வதேச போட்டிகளிலும் தன்னை நிரூபித்து இருக்கிறார். குறிப்பாக அவரது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்காக ஆடும் போது ஒவ்வொரு முறையும் எதிரணி வீரர்களை தனது பந்துவீச்சால் திணறடித்து இருக்கிறார்.
இந்தப் போட்டியில் முதல் ஓவரில் லக்னோ அணியின் துவக்க வீரர் க்விண்டன் டி காக்கை வீழ்த்தினார். அடுத்து மூன்றாவது ஓவரில் தேவ்தத் படிக்கல் ஹெல்மட்டை தனது பவுன்சரால் உடைத்த போல்ட், அடுத்த பந்திலேயே அவரை பவுல்டு அவுட் ஆக்கினார். அவரது அபார பவர்பிளே பவுலிங்கால் லக்னோ அணி நிதான ஆட்டம் ஆடத் துவங்கி இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 173 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.