ஜெய்ப்பூர் : மும்பை அணியின் குட்டி மலிங்கா என்று சொல்லப்பட்டு வந்த துஷாரா அறிமுகமான நிலையில், பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அவரின் பவுலிங்கை பொளந்து கட்டியுள்ளனர்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் மும்பை அணி தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நுவான் துஷாரா சேர்க்கப்பட்டார். இவரை மும்பை அணி ரூ.4.2 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியது. இலங்கை ஜாம்பவான் மலிங்காவை போன்று சைட் ஆர்ம் ஆக்ஷனில் வீசுவதால், இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

ஏற்கனவே மலிங்காவை போல் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வரும் பதிரானா களத்தில் மேஜிக்கை நிகழ்த்தி வருகிறார். மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசும் பதிரானாவின் யார்க்கர் மற்றும் பவுன்சருக்கு பதில் சொல்ல முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் பதிரானாவுக்கு போட்டியாக மும்பை அணி தரப்பில் துஷாரா ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 179 ரன்கள் சேர்த்தது. இதன்பின் ராஜஸ்தான் அணியின் பட்லர் - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. 2 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 13 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், உடனடியாக 3வது ஓவரை வீச துஷாரா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். 140 கிமீ வேகத்தில் வீசுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் அவர் வீசிய முதல் ஓவரில் 135கிமீ வேகத்தில் தான் பவுலிங் செய்தார்.
இதனை பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் கணித்து எளிதாக சமாளித்தனர். பின்னர் மீண்டும் பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச மீண்டும் துஷாரா வந்தார். அந்த ஓவரில் 0, 4, 4, 1, 4, 4 என்று 17 ரன்கள் விளாசப்பட்டது. இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்திருந்தது.
அதேபோல் இந்த சீசனில் முதல்முறையாக பவர் பிளே ஓவர்களில் மும்பை அணி விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறியுள்ளது. துஷாராவின் பவுலிங் ஆக்ஷன் நன்றாக இருந்தாலும், அவர் எதிர்பார்த்த அளவிற்கு வேகத்தில் வீசாததால் ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மலிங்காவே நேரடியாக பயிற்சியளிக்கும் நிலையில், வரும் போட்டிகளிலாவது கூடுதல் வேகத்தில் துஷாரா வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.