ஜெய்ப்பூர் : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி சுவாரஸ்யமான நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை சேர்த்துள்ளது. சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 45 பந்துகளில் 3 சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 65 ரன்களும், இம்பேக்ட் பிளேயராக வந்த நேஹல் வதேரா 24 பந்துகளில் 49 ரன்களும் சேர்த்தனர்.

ராஜஸ்தான் அணி தரப்பில் நட்சத்திர வீரர் சந்தீப் சர்மா 4 ஓவர்களில் 18 ரன்களில் மட்டுமே விட்டுக் கொடுத்து 13 டாட் பால்களை உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் பவர் பிளே ஓவர்களில் பவுலிங் செய்த சந்தீப் சர்மா, 2வது ஓவரிலேயே நட்சத்திர வீரர் இஷான் கிஷனை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். தொடர்ந்து 4வது ஓவரின் முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவ் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
பவர் பிளேவில் 2 ஓவர்களை வீசிய சந்தீப் சர்மா வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மிக முக்கியமான 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் மீண்டும் 15வது ஓவரில் அட்டாக்கில் வந்த சந்தீப் சர்மா 11 ரன்களை விட்டுக் கொடுத்த நிலையில், கடைசி ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் அதிரடியாக ஆடிய திலக் வர்மா, டிம் டேவிட் மற்றும் கோட்ஸி ஆகியோரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
ஸ்விங் பவுலரான சந்தீப் சர்மா, தற்போது ராஜஸ்தான் அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக மாறியுள்ளார். நீண்ட நாட்களாக தோள்பட்டை காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர், மும்பை அணிக்கு எதிரான இந்த போட்டியில் கம்பேக் கொடுத்தார். அவரின் கம்பேக் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்து அசத்தியுள்ளார்.
கடைசி ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததால் மும்பை அணி 179 ரன்களில் கட்டுப்படுத்த முடிந்தது. அதேபோல் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் பெரும்பாலும் யார்க்கர் பந்துகளையே நம்பி இருக்கும் சூழலில், சந்தீப் சர்மா கிராஸ் சீம் பந்துகள் மூலமாக அசத்தி வருகிறார். இதன் மூலம் இந்த சீசனின் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன் பும்ரா, யாஷ் தாக்கூர் ஆகியோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.